கதைக்கு முன்
டல்ஹவுசி
ஐந்து மலைகள் கொண்ட மலைப்பிரதேசமாகும் டல்ஹவுசி! கடல் மட்டத்திலிருந்து 1970 மீட்டர் உயரத்தில் உள்ளது! இவ்வருடம் டல்ஹவுசியை குளிர் வாட்டி எடுத்தது! சுற்றுலா மாந்தர்களின் வருகை கம்மியாக இருந்தாலும், அங்கேயே வாழும் மக்களின் அன்றாட பிழைப்புக்கு ஏதாவது ஒரு வழி இருந்துக்கொண்டே தான் இருந்தது!
குளிரெல்லாம் அந்த மண்ணின் மாந்தர்களுக்கு பாதிப்பெல்லாம் தரவில்லை! அழகிய இளங்காலையில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்!
இமாச்சல பிரதேசத்தின் பள்ளத்தாக்கு வழியாக மலை மற்றும் மரங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் சாலை தான் பனிகேத் – டல்ஹவுசி சாலை!
சில தினங்களாக நடந்த விபத்துகளால் சாலையோர முனையில் பாரபெட் எனப்படும் சின்னஞ்சிறு மதில்சுவர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்!
“ஹேய் ரூஹான்! ஆவோ... கர்மா கரம் சாய் பியோ... அவுர் காம் தேக்கோ!!!” என்று மதில்சுவருக்கு மேல்பூச்சு பூசிக்கொண்டு இருக்கும் தனது நண்பனை தேநீர் பருக அழைத்தான் குஷால்!
“ஹான்! ஹான்! மெய்ன் ஆத்தி ஹூன்!” என்று பள்ளத்தாக்கு பக்கமிருக்கும் பூச்சினை கண்ணெடுக்காமல் எக்கி பூசிவிட்டு எழுந்த ரூஹான், குஷாலை நோக்கி ஒரெட்டு வைக்கும் பொழுது தெரியாத்தனமாய் முன்னேயிருந்த அவன் எப்பொழுதும் அமரும் சிறு டப்பாவின் மீது கால் பட்டுவிட, அதுவோ பள்ளத்தினை நோக்கி உருண்டது மட்டுமில்லாமல், அதனின் மேல் கால்வைத்த ரூஹானையும் நிலை தடுமாற வைத்திருந்தது!
சடுதியில் ரூஹான் அந்த பள்ளத்தை நோக்கி குனிந்து விழப்போகும் முன் குஷால் ஓடிவந்து அவனைத் தாங்கி, சாலையின் பக்கம் நண்பனோடு வந்தவன், நடக்கவிருந்த விபரீதம் கண்டு மிரண்டுதான் போனான்!
“ஹேய் ரூஹான்! பார்த்து வரமாட்டியா? கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் என்ன ஆகியிருக்கும்?”
பதட்டத்தோடும், அக்கறையோடும் கடிய, ரூஹானிடம் பதில் மொழியே இல்லை! நொடி நேரம் என்றாலும், ரூஹானது கண்கள் அந்த பள்ளத்தாக்கின் அடியாழம் வரை தொட்டு சென்றிந்தது!
அவன் கண்கள் அங்கே கண்டது என்ன? உண்மையில் தான் கண்டது சரிதானா? இல்லை ஏதும் மனப்பிரம்மையா?
கண்கள் அலைப்புற, கைகள் நடுங்க, அந்த குளிரிலும் நொடியில் நெற்றியில் உண்டான வியர்வை முத்துகளோடு நண்பனது பிடியில் விடுப்பட்டு மீண்டும் பள்ளத்தாக்கின் பக்கமே ஓடியிருந்தான் ரூஹான்!
“டேய்! என்ன பண்ணுற?” குஷால் வார்த்தையாலும் செயலாலும் தடுத்தும் ரூஹான் நிற்கவில்லை!
நண்பனது பின்னோடு தானும் ஓடிய குஷால், “ரூஹான்! என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டான்!
தனக்கு பதில் தராமல் பள்ளத்தாக்கின் விளிம்பு நோக்கி சென்று அங்கு குத்துக்காலிட்டு அமர்ந்து எக்கி எக்கி பார்க்கும் ரூஹானின் மேல் கோபம் வந்தாலும், ‘அப்படி என்னத்தை பார்க்கிறான்?’ என்று புரியாமல் நண்பனது பார்வையை தொடர்ந்து தானும் அந்த இடத்தை நோக்கி பாதுக்காப்பாய் சென்று பார்வையிட்டான்!!!
அங்கோ... அவன் கண்டது...
அத்தனை ஆழம் செல்லும் பள்ளத்தாக்கின் ஒரு பக்க நடுவில்... மலை இடுக்குகளில் வீற்றிருக்கும் பெரிய காட்டுமரம் ஒன்றின் தடிமனான பிடியில்... பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டிருக்க, ஒருவன் உடல் முழுவதும் ரத்தம் உறைந்துப்போன காயங்களுடன் நிலைத் தடுமாறி தலைகீழாக தொங்கியபடி இருப்பதை தான்!
“டேய் ரூஹான்? யாரோ செத்துக்கிடக்குறாங்கடா...”
குஷாலின் கண்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது!
ரூஹானது கண்களோ நொடியும் இமைக்காமல், “இல்லை... உயிரோடத்தான் இருக்கான்!” என்று அவனை சொல்ல வைத்தது மட்டுமல்லாமல், அந்த ‘அவனின்’ லேசாய் அசையும் கைவிரல்களின் மேலேயே பார்வையை வீற்றிட செய்திருந்தது!!!