டீசர் 3
நகர வங்கிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினான் ரகுவீர பாண்டியன். வழியில் மருத்துவச்சி நடக்க முடியாமல் நடந்து செல்வதைக் கண்டவன் தனது கருப்பு நிற ஜீப்பை நிறுத்தினான்.
“என்ன ஆத்தா.. இந்த வெயில்ல நடந்து போயிட்டு இருக்க..” என்று அவன் கேட்க
“இப்போ தான்ய்யா பொண்ணு வூட்டுல இருந்து வாரேன். இந்த சின்னவனை வர சொல்லி இருந்தேன். அவனை ஆளையே காணோம். இருந்து இருந்து பார்த்துப் போட்டு நடந்தே ஊர் போய் சேரலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். முடியல.. வயசாயிடுச்சுல” என்று கூறினார் மருத்துவச்சி.
“சரி.. வா.. வண்டியில ஏறு. வீட்டுல விட்டுடுறேன்” என்று ரகுவீரன் கூற, மருத்துவச்சி வாயெல்லாம் பல்லாக வண்டியில் ஏறி அமர்ந்தார்.
ஜீப் கிளம்பியது. சிறிது தூரம் சென்றதும் “ஆமா.. பொண்ணுக்கு பிரசவம் பார்க்க தானே ஊருக்கு போன ஆத்தா.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா” என்று ரகுவீரன் கேட்க
“ஹான்.. நல்லபடியா முடிஞ்சுது” என்று குரலில் சுரத்தே இல்லாமல் கூற,
“ஏன் ஆத்தா.. ஒரு மாதிரி சோகமா சொல்ற?”
“பொறந்தது பொம்பளப் புள்ள ஆச்சேய்யா. பொட்டைப் புள்ளையை பெத்துட்டீயேடின்னு மாமியாக்காரி நித்தமும் என் புள்ளையை வையுறாளே. அதை கேட்க முடியாம தான் நான் மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு வந்துட்டேன்” என்றார் மருத்துவச்சி.
அதற்கு ரகுவீர பாண்டியன் ஒன்றும் சொல்லவில்லை. சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, மருத்துவச்சியே பேச்சை தொடங்கினார். “சீதாம்மா.. எப்படிய்யா இருக்கு?” என்று அவர் முகமெல்லாம் பூரிப்பாக கேட்க
அதை கேட்ட ரகுவீரனின் முகம் சட்டென இறுகிப் போனது. “அவளுக்கு என்ன.. நல்லா தான் இருக்குறா” என்றான் அவன்.
“வேளா வேளைக்கு புள்ள நல்லா சாப்பிடுதாய்யா.. இல்ல சோர்ந்து போய் படுத்துக் கெடக்குதா?” என்று மருத்துவச்சி கேட்கவும் தான் நேற்று அவன் படுக்கை அறைக்குள் நுழைந்த போது சீதா குளியலறையில் வாந்தி எடுத்து விட்டு வந்து சோபாவில் படுத்துக் கொண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
அதை அவன் மருத்துவச்சியிடம் கூற.. “இப்போ அப்படி தான் இருக்கும். கொஞ்ச நாள் போச்சுன்னா.. மசக்கை எல்லாம் நின்னுடும்” என்றார் அவர்.
“மசக்கையா.. என்ன உளர்ற ஆத்தா.. வெயில்ல நடந்து வந்ததுல மண்டை காஞ்சிப் போச்சா உனக்கு..” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க
“என்னய்யா சொல்ற.. சீதாம்மா புள்ளத்தாச்சியா இருக்குறது உனக்கு தெரியாதா?” என்று மருத்துவச்சி குழப்பத்துடன் கேட்க, ரகுவீரன் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.
அவன் புரியாமல் மருத்துவச்சியை ஏறிட்டுப் பார்க்க, அவர் நடந்தவற்றை எல்லாம் ரகுவீரனிடம் கூறினார். அதை கேட்க கேட்க அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. மீண்டும் வண்டியை கிளப்பியவன் மருத்துவச்சியை அவரது வீட்டில் விட்டுட்டு நேரே அவனது வீட்டிற்கு தான் சென்றான்.
புயல் வேகத்தில் வந்த ஜீப் வீட்டு வாசலில் பிரேக் போட்டு நிறுத்த, அந்த இடத்தில் புழுதி பறந்தது. ஆவேசமாக தாவி இறங்கிய ரகுவீர பாண்டியன் “சீதா.. சீதா..” என்று கத்த, அவளை தவிர வீட்டில் உள்ள அனைவரும் நடு கூடத்தில் வந்து நின்றனர்.
“என்னப்பா.. என்னாச்சு.. வந்ததும் வராததுமா ஏன் அவளை கூப்பிட்டு இருக்க??” என்று வடிவுகரசி கேட்க
அவன் அதை காதிலே வாங்கி கொள்ளவில்லை. “ஏய்.. சீதா எங்கேடி இருக்க” என்று அவன் மாடிப்படியைப் பார்த்து கத்த
“டேய்.. நான் தான் அவளை கொள்ளப்பக்கமா போய் மாட்டுக்கு தண்ணீ காட்டிட்டு வர சொன்னேன்” என்று வடிவுகரசி கூறிய நொடி அவன் வீட்டின் கொள்ளப்புறத்திற்கு ஓடினான். அவனை தொடர்ந்து அனைவரும் வேகமாக சென்றனர்.
அங்கே கிணற்றில் இருந்து தண்ணீரை சேந்தி பித்தளைக் குடத்தில் ஊற்றிய சீதாலட்சுமி அதை தூக்கி இடுப்பில் வைக்க போக, ரகுவீரன் ஓடி வந்து அந்த கனமான குடத்தைப் பிடுங்கிக் கொண்டவன் அதை தூக்கி எறிந்தான்.
சீதாலட்சுமி கணவனது ஆவேசத்தைக் கண்டு பயந்துப் போனவள் கிணற்றோடு ஒட்டி நின்று கொண்டாள். அவளது ஒரு கை வயிற்றைப் பற்றிக் கொண்டது. “ரகுவீரா.. என்னடா பண்ற..” என்று வடிவுகரசி கத்திக் கொண்டே அவ்விடம் வர, அவனின் பார்வையோ மனைவியின் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.
அவளது வயிறு சற்று பெரியதாக இருப்பது வெறுமென பார்த்தாலே தெரிந்தது. ‘இதை எப்படிடா கவனிக்காம விட்ட’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவன் மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டான்.
“நீ கர்ப்பமா இருக்குற விஷயத்தை ஏன்டி சொல்லாம மறைச்ச” என்று அவன் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க, சீதாலட்சுமி அதிர்ந்தாள்.
“கேட்குறேன்ல.. பதில் சொல்லுடி..” என்று ரகுவீரன் பெருங்குரல் எடுத்து கத்த, சீதாலட்சுமி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
ஆழ்ந்து மூச்சை இழுத்து வெளியே விட்ட சீதாலட்சுமி மெதுவாக கண்களை திறந்து கணவனை நேருக்கு நேர் பார்த்தவள் “ஏன் சொல்லணும்” என்று நிதானமாகக் கேட்க, ரகுவீரனின் புருவங்கள் கேள்வியோடு முடிச்சிட்டது.
“நான் இந்த வீட்டுல சம்பளமே இல்லாத வேலைக்காரி தானே” என்று அவள் கேட்க, ரகுவீர பாண்டியன் அவளை அனல் தெறிக்க முறைத்தான். அவனின் பின்னாடி நின்று இருந்த வடிவுகரசியோ ‘அடிப்பாவி’ என்று வாயில் வைத்துக் கொண்டார்.
“காலையில எழுந்ததும் கொள்ளப்புறத்தை கூட்டி பெருக்குனேனா.. சமையல்க்கட்டு நின்னு யார் யாருக்கு வேணும்னு கேட்குறாங்களோ அதை சமைச்சி போட்டேனா.. எல்லாரும் தின்னுட்டு போனதுக்கு அப்புறம் சமையல்க்கட்டை சுத்தம் பண்ணிட்டு மீந்துப் போன சாப்பாட்டை நாலு வாய் அள்ளித் தின்னோமா.. பொழுது போனதும் மூலையில படுத்து தூங்கணுமான்னு.. ஒரு வேலைக்காரியா தானே இந்த வீட்டுல நான் நடமாடிட்டு இருக்கேன்.
எனக்கு தாலி கட்டுன மனுஷன் என்னை அப்படி தானே இந்த வீட்டுல வச்சி இருக்கார். என்னோட விருப்பத்திற்கும் வெறுப்புக்கும் இங்க மதிப்பு இருக்கா என்ன? பின்னே ஏன் நான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை உங்கக்கிட்ட எல்லாம் சொல்லணும்?” என்று நீளமாக பேசி முடித்தவள் கீழே கிடந்தப் பித்தளைக் குளத்தை எடுத்து வந்து கிணற்று சுவரின் மீது வைத்து தண்ணீரை சேந்தி அதில் ஊற்ற, ரகுவீரன் ஆத்திரத்துடன் குடத்தை எட்டி உதைத்தான்.
பித்தளைக் குடம் கிணற்றினுள் விழுந்து விட, சீதாலட்சுமி அசராமல் நின்றாள். கோப மூச்சுக்கள் வெளியேற நின்று அவளை முறைத்தவன் விறுவிறுவென்று திரும்பிச் சென்று விட, சீதாலட்சுமியின் கண்கள் கலங்கிப் போனது.