பூவிழி அசைவிலே-2
அகரம் கொண்ட அகன்ற நதி
காவிரியில் கை கோர்த்து
கவியில் நிந்தனை வைத்து
சிகையில் சிந்து பாடி
மதியில் மையம் கொண்டு
மத்தியில் நிற்போரை பித்தாய் மாற்றி சித்தம் குழைய வைக்குமாம்.
கண் எனும் பொன்மலர் கொண்டு காண்போர் எவரையும் பித்தாய் ஆக்கும் அழகிய பொன்வனப்பு கொண்ட சிங்கார ஊர்தான் குளித்தலை.
கடம்பவனம் என்ற பெயர் கொண்டு நவிழப்பட்ட, குளிர் வனப்பகுதியான “குளிர் தண்டலைதான்”, காலப்போக்கில் மறுவி குளித்தலை என்றாகி போனது.
கரூர் மாவட்டத்தின் மத்தியில் முசுறிக்கு அடுத்து அமைந்துள்ள ஓர் அழகிய சிற்றூர். காவிரியின் தென்பென்னை வஞ்கம் இல்லாமல் வாஸ்து செய்யும் பூமி. கர்நாடகாவின் குடகுமலை பகுதியில், “ஆடு தாண்டும் காவிரி”, என்று கூறப்படும் காவிரி, குறுகிய வடிவில் குளித்தலை நுழையும் போது, “காகம் கடக்கா காவிரி”, என்ற சிறப்புடன் பரந்து விரிந்து காட்சி தருகிறது.
இந்த பூமியில் விவசாயம் தான் பிராப்தமாக இருக்கிறது. வாழை, கரும்பு, நெல், வெற்றிலை இது நான்கும் தான் பக்குவம் பார்த்து இந்த பூமியில் பயிரிடப்படுகிறது.
மும்மாரி பெய்யும் மேகம்
மூன்று போகம் விளைவிக்க நினைத்தால்
முந்நூறு நாட்கள் மூச்சடக்கி
முன்னவர் (கடம்பவனேஸ்வரர்) சொல் கேட்டு
பன்னீர் சொட்டை
முல்லை கொடி போல் பொழியுமாம்.
இங்கு விளையும் பல்வகை வாழை மிக சிறப்பு மிக்கது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு இங்கு விளையும் வாழையைதான் வீட்டு விசேஷம், மருத்துவம் சம்மந்தபட்ட பல தேவைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டுக்கு வீடு எது இருக்குமோ, இல்லையோ ஆனால் மருத்துவ சிறப்பு மிக்க வாழை கண்டிப்பாக இருக்கும்.
முதலில் பயிரிடப்படும் வாழைக்கு பின் கரும்புதான் இப்பகுதியில் பிராப்தம். இங்கு சுற்று வட்டார பகுதியில் சர்க்கரை ஆலை மிகுதி என்பதால் கரும்பு பயிரிடப்படுகிறது.
நெல்...
காவிரி ஆற்று நீரில் விளையும் நெற்களஞ்சியம் பற்றி சொல்லத்தான் வேண்டுமோ?. குவிந்து நிற்கும் நெற்களஞ்சியம் குளித்தலையின் கூரான மணிக்களஞ்சியம்.
வெற்றிலை...
தண்டுக்கும் நோகாமல்
தண்டை தழுவி வளரும்
நுனிக்கும் நோகாமல்
தனஞ்சயனுக்கு அள்ளி அள்ளி சந்தோஷத்தை வழங்குவதே வெற்றிலை.
குளித்தலையில் கடம்பவனேசுவரர் கோயில் சிறப்பும், கடாட்ச்சமும் நிறைந்த கோயில். இந்த கடம்பவனேசுவரருக்கு வருடத்தில் தைத்திங்கள் மட்டும் அறுவடை செய்த முதல் போகத்தை படையலிட்டு தை பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தை பூச திருவிழாவின் போது விரதம் காத்து பக்தி சிரத்தையாய் இருக்கும் கன்னி பெண்களுக்கு ஓராண்டுக்குள் திருமணம் நடக்கும் என்பது கடம்பவனேசுவரர் வாய் மொழி கூற்று. ஊரை பற்றி பறை சாற்றிய தகவல் போதும். விதுவின் விழியழகியை காண செல்லலாமா.
அதிகாலை 4 மணி.
கனவில் வரும் கள்ளி யாரென அறியாமல்,
கள்வன் காதல் கொள்ள நினைக்கிறான்,
ஆனால் கன்னியோ...
ஆழ்ந்த நித்திராதேவியை ஆரத்தழுவி உறங்கிக் கொண்டிருந்தாள் விதுவின் அழகி.
வஞ்சினம் கொண்டு
வல்லினம் கண்டு
மெல்லினம் மென்று
மெலிர் கொடியால் செய்யப்பட்டவள்
இந்த பூம்பாவை,
சந்திர ஒளியில்
சமஒளி எடுத்து
சந்திர திலகம் இடப்பட்ட
கூர்மையான நெற்றி,
மேகத்தின் நீலநிறம் போல்
நீலத்தை கொட்டி வார்க்கப்பட்ட
நீலநிற பூவிழி,
மங்கையின் இதழ்
மலரிதலும் அல்ல
உலரிதலும் அல்ல
அலரில் கலந்த பூவிதழ்.....
இடை எனும் கொடி
அல்லிக்கொடியும் அல்ல
மல்லிக்கொடியும் அல்ல
மரகதகற்கள் பதிக்கப்பட்ட
மாணிக்கதேர் அவை.
பால்நிறம் அல்ல இந்த பூவழகி,
பால் வண்ண நிறம் கூட பொறாமை படும் தேன் வண்ண அழகி. தேனில் ஊறிய மதுகிண்ண அழகி. தேன் உண்டும் வண்டையே தேன் எடுக்க தூண்டும் தேர் விழியழகி. பிரம்மனின் அழகிய படைப்பு இவள்
பிரம்மனின் அழகிக்கு கூட கிடைக்காத அரிய படைப்பு இவள். கண்ணின் ஒளி பார்த்தால் கண்ணன் கூட மயங்கிதான் போவான். இந்த தேவதை அழகை கண்டு பாற்கடலில் துயில் கொள்ளும் பரந்தாமனே மெய் மறக்கும் போது பாற்கடல் வேந்தன் கனவில் உளருவதற்கு தகும் தானே.
சிரித்த முகமாய் துயில் கொள்ளும் இவளின் அழகை பார்த்தால் ஸ்ரீதேவி கூட மெய்மறந்து தன்னை தொலைத்து போவாள். பாரம்பரியம் சூழ பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய வீடு. நடுமுற்றத்தில் பெரிய அகன்ற தூண் வைத்து கட்டப்பட்டது. பல அறைகளும், மேல் மாடி சுற்றமும் வைத்து கட்டப்பட்டவை. கீழறையில் இருக்கும் வலது பக்க அறையில் துயில் கொண்டிருந்தாள் விழியழகி.
அவளை நோக்கி வந்தது ஒரு பருத்த உருவம். மேனி முழுவதையும் நகைகள் மறைத்திருக்க, வெற்றிலை போட்டு போட்டு சிவந்து உமிழ்ந்து போயிருந்த பருத்த அதரங்கள் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க, அழகியை முறைத்து கொண்டு நின்றார், வள்ளி, மரகதவள்ளி.
விழியழகி அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்தவர் ஆவேசத்தோடு அவள் முகத்தில் விசிறியடித்தார்.
அடித்து பிடித்து எழுந்தாள் விழியழகி, நீலவிழி கண்கள் பட்டாம்பூச்சி போல் மின்ன, இமை மறைத்தாடும் கார்மேக குழல் காற்றின் வேகத்திற்கு ஏற்றது போல் அசைந்தாட, வெண்டை விரல் வெள்ளரி பிஞ்சு போல் தளர்ந்து நிற்க, நீலநிற விழி அசைவால் மரகதவள்ளியை ஊற்று பார்த்துவிட்டு,
"சி... சி... சித்தி... என்ன ஆச்சு... ஏ தண்ணிய மொண்டு மேல ஊத்து...”,
“அடி.... எடுபட்ட சிறுக்கி மவளே... விடிஞ்ச அம்புறம் தூக்கி போட்டு இப்போ கேள்வி வேற கேக்கியோ... ஆத்தாள முழுக்குனவளே எழுந்து போயி பால கற. சொசுட்டி வண்டி வந்துரும்”.
இரவெல்லாம் மாவாட்டி மாவாட்டி கன்றி போயிருந்த கைகள் அசைக்க முடியாமல் கூட ரணமாய் வலிக்க, இவள் பால் கறக்க மாட்டேன் என்று காரணம் சொல்லியா மறுக்க முடியும். ராட்சசி அதற்கும் அல்லவா வார்த்தையால் கர்ணம் வீசி கொல்லுவாள். நீண்டு காற்றில் ஆடிய கூந்தலை அள்ளி சொருகியவள் கொல்லைபுறம் சென்று முகம் அலம்பி வீட்டு வாசலில் சாணி கலந்து தெளித்துவிட்டு, கோலம் போட்டவள், பாத்திரத்தை எடுத்து கொண்டு மாட்டு தொழுவத்திற்கு சென்றாள்.
“லட்சுமி. ஸாரிடா செல்லம் நைட் கொஞ்சோ வேலை இருந்துச்சா அதா சீக்கிரம் எந்திக்கமா தூங்கிட்டேன். இரு ஓ பாப்பாவ அவுத்துவிடுறே”. பசுவின் முதுகை தடவிவிட்டு அதன் கன்று குட்டியை அவிழ்த்துவிட்டாள். இளங்கன்றுகுட்டி தாயின் மடியை முட்டி முட்டி குடிக்க, அந்த சந்தோஷ தருணத்தை ரசித்தபடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள் விழியழகி.
“ஏய், இன்னும் என்னடி பண்ற? பால் கறந்துட்டியா? இல்லியா? மரகதவள்ளி வீட்டிற்குள் இருந்து கத்தினார்.
“சே.... எப்போ பாத்தாலும் இந்த சித்தி நொய்யி நொய்யினு. லட்சுமி நா பால் கறந்த அப்புறோம் பாப்பாவ அவுத்து விடுறேன். இப்போ பாப்பாவ புடிச்சுக்கிறேன்”.
அது தன் குட்டியை ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் நாக்கால் நக்கிவிட்டு அவள் பால் கறக்க விலகி நின்றது.
தான் கட்டியிருந்த தாவணி பாவாடையை எடுத்து சொருகியவள், லட்சுமியின் மடியை தண்ணீர் கொண்டு சுத்தபடுத்திவிட்டு, இரண்டு கைகளிலும் விளக்கெண்ணை தடவி இரண்டு சொட்டு பாலை பூமாதேவிக்கு விட்டுவிட்டு மிச்ச பாலை கறந்தாள். அவள் வெண்நுரை ததும்பும் பாலை கறந்து முடிக்கும் முன் அவள் வாழ்க்கை புத்தகம் ஓர் அலசல்.
விழியழகியின் தாய் - தந்தை, சுந்தரம் - இலக்கியவதி. சுந்தரத்திற்கு திருமணமான கொஞ்ச நாட்களில் அவருடைய தாய், தந்தையர் காலமாகிவிட இலக்கியவதிதான் சுந்தரத்திற்கு எல்லாம். சுந்தரத்திற்கு உடன்பிறந்தவர்கள் ஒருவரும் இல்லை. ஆனால் இலக்கியவதிக்கு, மரகதவள்ளி என்ற தங்கையும், அவருக்கு அடுத்து சோலைமலை என்ற ஒரு தம்பியும் உண்டு.
இந்த காலத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலே சண்டை வரும் நேரத்தில் வாயும், வயிறும் வேறு வேறாகி போகும். அப்படி இருக்க, இலக்கியவதியின் தந்தைக்கு இரு தாரம். இதில் இலக்கியவதி மூத்த தாரத்துக்கு பிறந்த பெண். மரகதவள்ளியும், சோலைமலையும் இளைய தாரத்திற்கு பிறந்தவர்கள்.
இரண்டாம் தார பிள்ளைகள் அவர்கள் என்று இலக்கியவதி ஒரு தடவை கூட பாரபட்சம் பார்த்தது கிடையாது. அவர்கள் இருவரையும் தன் தாய் வயிற்றில் பிறந்த சொந்தம் போல் பாசம் காட்டி வளர்த்தார்.
விழியழகிக்கு ஐந்து வயது இருக்கும் சமயம் இலக்கியவதிக்கு என்னவென்று அறிய முடியாத தீராத வியாதி வர, அவர்களின் குக்கிராமத்தில் இருந்த மருத்துவ வசதிக்கு அவரை பிழைக்க வைக்க முடியாது என்று அத்தனை மருத்துவர்களும் கைவிட்டுவிட, சுந்தரம் சல்லி சல்லியாய் உடைந்து போனார். ஐந்து வயது குழந்தைக்கு என்ன தெரியும், தன் தாய் சீக்கிரம் தன்னை விட்டு பிரிந்து விடுவார்கள் என்றா? அப்படியே பிரிந்தாலும் திரும்பி வரமாட்டார்கள் என்று சொல்லியா புரிய வைக்க முடியும். சுந்தரம் உடைந்து நின்ற போது மரகதவள்ளியின் மனம் புத்திசாலி தனமாய் திட்டம் தீட்ட தொடங்கியது.
வீட்டிற்கு ஒரு வாரிசு இவள், சுந்தரத்தின் சொத்து ஓரளவு பெருகி கிடக்கிறது ஆண்டு அனுபவிக்க நம் பிள்ளை இருந்தால் எப்படி இருக்கும் என்று மரகதவள்ளியின் மனம் திட்டம் தீட்ட, சோலைமலையும் அந்த திட்டத்திற்கு உதவி செய்தான்.
இலக்கியவதியிடம் சென்று பேசியவர் அவர் மகளை தன் மகளாய் பார்த்து கொள்வதாய் சொல்ல, இலக்கியவதி தன் பிள்ளையை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து, சுந்தரம் - மரகதவள்ளியின் கையில் ஒப்படைத்தார். அடுத்த ஒருவாரத்தில் திருமணம் அரங்கேறி போனது. சுந்தரத்திற்கு இலக்கியவதி இருக்கும் போது மரகதவள்ளியை மணந்தது மனதிற்கு ஒப்பாமல் இருக்கவே, மரகதவள்ளியிடம் இருந்து விலகியே இருந்தார்.
ஒரு மாதம் வரை இன்பமாய் அந்த வாழ்வை ஏற்று கொண்ட மரகதவள்ளிக்கு சுந்தரத்தின் பாரமுகம் கோபத்தை தர, வீட்டில் யாருமில்லா நேரத்தில் இலக்கியவதியிடம், கொடுஞ்சொல் கொண்டு அவரை வார்த்தையால் வதைக்க, தன்னவனையும், தன் பிள்ளையையும் கூட கண்ணில் காணாது அவர் உயிர் பூலோகத்தை விட்டு பிரிந்தது.
வயலுக்கு சென்றுவிட்டு வந்த சுந்தரம் இலக்கியவதி மேல் விழுந்து கதற, விழியழகி அவரையும், இலக்கியவதியையும் பார்த்து பார்த்து அழுக, அதன்பின் சுந்தரம் நடைபிணமாகி போனார்.
அவர் மொத்த உலகமும் அழகி மட்டும்தான். மரகதவள்ளியையோ, சோலைமலையையோ அவர் ஒரு பொருட்டாகக் கூட கண்டு கொள்ளமாட்டார்.
பல காலங்கள் பொறுமை காத்த மரகதவள்ளியால் விழியழகி பருவ வயதை அடையும் சமயம் பொறுமையாக இருக்க முடியவில்லை.
சுந்தரத்திடம் சென்றவர் விழியழகியை காட்டி சண்டையிட, சுந்தரத்திற்க்கும் - மரகதவள்ளிக்கும் சண்டை முற்றி போக ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே இலக்கியவதி இல்லாமல் நடை பிணமாய் வாழ்ந்தவர் வள்ளியின் சுடு சொல் தாங்காமல் அதீத மன உளைச்சலில் இருந்தவருக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிட விழியழகி நிலைதான் கவலைகிடமாகி போனது.
காலை நான்கு மணிக்கு எழ வேண்டும், வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்ய வேண்டும். மாலை சீக்கிரமே வீட்டிற்கு வர வேண்டும். இதுபோல் இன்னும் பல இம்சைகள். அனைத்தையும் தன் தந்தைக்காக பொறுத்து கொண்டாள் விழியழகி.
பாலை கறந்து முடித்தவள் சொசைட்டி வேனில் பாலை ஊற்றிவிட்டு திரும்ப, சோலைமலை தள்ளாடியபடியே வந்தான்.
“ஏ அழகி... ஏ பொண்டாட்டி. என்னடி பண்ற. மாமே வந்துருக்கே ஆசையா கிட்ட வந்து”... விழியழகி முகம் சுழித்து நிற்க,
“என்னடி ஆத்தாள முழுங்குனவளே, நீ இப்டி கோணிக்கிட்டு பாத்தா நா சும்மா விடுவேனா. வாடி இங்க”, சோலை, விழியழகியின் கை பிடித்து இழுக்க நினைத்து கையை கொண்டு போக, அதற்க்கு முன் அவன் பிடதியில் விழுந்த அடியில் பொறி கலங்கி கீழே விழுந்தான்.
புஜம் இரண்டும் திமிறி துடிக்க, தீப்பொறி கண்கள் இரண்டும் கோவத்தில் சிவக்க, களை வெட்டி உரமேரிய கை வேட்டியை இழுத்து பிடித்து மடித்து நிற்க, செதில் செதிலாய் இருந்த விரிகோடுகள் கொண்ட வயிற்று பகுதி அணிந்திருந்த வெள்ளை பணியனை தாண்டியும் விரைத்து புடைத்து திமிறி தெரிய, தலையில் கட்டிய துண்டோடும், கலைந்து நின்ற கேசத்தோடும், பட்டரையாய் இருந்த மார்பு கோவத்தில் ஏறி இறங்க சோலையின் வயிற்றில் ஓங்கி ஒருமிதி.
குடித்த சரக்கு அனைத்தும் வெளியே வாந்தியாய் கொட்ட, கூளம் கட்டி வைத்திருந்த சாட்டையை எடுத்து சக்கை சக்கையாய் பிழிந்தான் அவன்.
“நிலவணா சொன்னா கேளுங்க. மாமாவ விடுங்க செத்துட கித்துட போகுது”.
“நீ சும்மா இரு அழகி. எம்புட்டு தெனாவெட்டு இருந்தா உன்னைய கட்டிக்க சொல்லி கேப்பான். ஓ வயசு என்ன, அவே வயசு என்ன. பிச்சைக்கார பய. இன்னிக்கு அவன ரவ ரவையா உரிக்குறதுதே ஏ மொத வேலையே”.
“அய்யோ அண்ணா கேளுங்க சித்தி வந்துட போகுது. விடுங்க அண்ணா”.
அவன் அப்படியும் விடாமல் சோலையை மாற்றி மாற்றி சாத்த,
“ப்ச்... போச்சு போச்சு விட்டா அண்ணே இவன அடிச்சே கொன்னுடும். இப்போ துகி இங்க வந்தாதா அண்ணன சமாதானபடுத்த முடியும்”.
வேகமாய் கொள்ளைபுற சந்தில் ஓடியவள் இரண்டு வீடு தள்ளி கோலம் போட்டுக் கொண்டிருந்த துகிராவை அழைத்தாள். “அடியே... அடியே துகி”...
அனிச்ச மலர் குழல் அழகி, அகன்ற விழி பார்வை அழகி, வெள்ளை நிற பூவழகி, தென்றலே கொஞ்சி விளையாட தோன்றும் மேனி அழகி. தன் பருவ அழகை மறைத்து வைத்தவள் சிரித்த முகமாக திரும்பி பார்த்தாள்.
“ஏ அழகி என்னா புள்ள, எதுக்கு இப்டி மூச்சு வாங்குற. என்ன விஷயம்”.
“சீக்கிரம் வீட்டுக்கு வாடி, அங்க ஓ பொழில் மாமா”...
“ப்ச்... ஆரம்பிச்சுருச்சா. ஓ மாமாவ போட்டு மிதிச்சுகிட்டு இருக்கா? இதுக்கு எப்போ பாத்தாலும் இதே வேலைதா. யாரையாவது காலைல தூக்கி போட்டு மிதிச்சாதா அதுக்கு காலம்பர பொழுதே விடியும்”, துகிரா அலறிக்கொண்டே விழியழகியின் கை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.
அங்கே பொழில் நிலவன், சோலைமலையை இன்னும் வெறி கொண்டு புரட்டி எடுத்து கொண்டிருக்க,
“ஏ மாமா, ஏ மாமா. காலம்பர எதுக்கு இப்டி அக்கப்போறு கூட்டுற, வா இந்தபக்கம்”, துகிரா அவனை பிடித்து இழுத்தாள்.
“ஏய், விடுடி தங்கச்சிய அசிங்கமா பேசுன இவன”... துகியின் கையை விடுவித்துக் கொண்டே ஓடிவந்து சோலையின் சங்கில் ஒரு மிதி.
“ஏய் என்னடி இந்த பக்கம் ஒரே சத்தமா இருக்கு”, மரகதவள்ளி கேட்டுக்கொண்டே வந்தார்.
துகிரா அதற்குள் பொழில் நிலவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்த கிணற்றடி பக்கம் மறைய,
“ஐய்யோ ஐய்யோ, எய்யா ராசா, எந்தம்பி உனக்கு என்னய்யா ஆச்சு. ஏ சிறுக்கி புள்ள எதுக்குடி இப்டி கெடக்குறான், என்னடி ஆச்சு. நீ ஏதாவது செஞ்சியா”.
மரகதவள்ளி அழகியை பார்த்து கேள்வி கேட்கவும், துகிரா, நிலவனை முறைத்து, “பாரு மாமா எல்லாமே உன்னாலதா, இப்போ மட்டும் அழகிக்கு உன்னால ஏதாவது பஞ்சாயத்து வரட்டும், உன்னை வெளுத்து கட்டிறேன்”.
மூச்சு காற்று மேலே தீண்டும் அளவு நெருங்கி நின்று அவனை வசைபாடிக் கொண்டிருந்தாள் துகிரா. அவள் பேச பேச இடையோடு ஆரத்தழுவி அவளை இறுக்கி அணைத்தவன், “ன்னாடி வந்ததுல இருந்து கட்டிக்க போறவேன்னு மரியாத கொஞ்சுங்கூட இல்லாம, மீன்குஞ்சு மாதிரி துள்ளுறவ”.
அவனை இன்னும் அதிகமாய் இறுக்கி அணைத்தவள், “பணியனை இழுத்து பிடித்து அவன் மூச்சு காற்றின் வாசம் வாங்கி கொண்டே, ‘டேய் காட்டான்’.
அவன் சண்டியர் முழி பெரிதாய் விரிய, “ன்னாது காட்டானா உன்னை...”, பொழில் நிலவன் கையை ஓங்க,
“அடிச்சுருவியா, அவ்ளோ சண்டியர் தனம் இருந்தா நிலவே பொண்டாட்டிய தொடுறா”.
“ஏய் என்னடி அடிக்கமாட்டேன்னு உனக்கு நினைப்பா. இழுத்து புடிச்சு செவில்ல ஒன்னு விட்டேன்னு வையு”.
“மாமா செவுல்ல விடுவியா. பாப்பா பாவம் இல்ல. ஏ கண்ண பாத்து உனக்கு காதல் வரல. உம்...”.
“ஏ போதும்டி மனுஷே அவஸ்த புரியாம, முத்தம், கித்தம்னு ம்ஹூம்”. தலையில் கிடந்த துண்டை எடுத்து உதறி அவளை விலக்கி நிற்க வைக்க, அவள் இன்னும் பசை போல் பசக்கென்று அவனை ஒட்டிக்கொண்டாள்.
இருவரும் சூழ்நிலை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து தொலைந்து நின்றார்கள். (ஹீரோ, ஹீரோயின் காதலுக்கு முன்னாடி இதுங்க லவ் சீன் பயங்கரமா இருக்கோ, அடுத்த சீன்ல கம்மி பண்ணிடலாம்...)
ஊரின் பெரிய தலைக்கட்டு கடம்பவன் - கோதையின் ஒரே ஒரு ஆசை புதல்வன்தான் பொழில் நிலவன்.
உலகநாதன் - தாமரை செல்வி இருவரின் இரு செல்வங்கள் தான் வெய்யோன், துகிரா.
கடம்பவனும், தாமரை செல்வியும் உடன்பிறப்புகள். கோதையும், உலகநாதனும் உடன்பிறப்புகள். இவர்கள் பரம்பரையில் பெண் குடுத்து பெண் எடுக்கும் வழக்கம்தான் காலந்தொட்டு காலம் பின்பற்றபட்டு வருகிறது.
“ஏ சொல்ல போறியா இல்லையாடி. சிறுக்கி. எதுக்கு இப்டி கடம்பே கோயிலு நிலை கல்ல திண்ணவ மாதிரி நிக்குற”.
“சி... சி... சித்தி... அது வந்து, நா பால் கறந்துட்டு கிணத்து பக்கம் வந்தேனா, வந்து பாக்கும் போது மாமா கீழ விழுந்து கிடந்துச்சு. எனக்கு வேற எதுவும் தெரியாது. நல்லா குடிச்சதால அதுக்கு நிதானம் தெரில”.
“ஏ உன்னை... புள்ள கீழ வழுக்கி விழுகுற வரை சும்மாவா இருந்த. தடிமாடு, தண்டசோறு”.
“அக்கா. குறுக்கு ஒடஞ்சுருச்சு போல, வா வந்து தூக்கு. ஆமா எனக்கு என்ன ஆச்சு”.
“ஆ... வெண்ணை விளக்கெண்ணை ஆச்சு. இந்த காலங்காத்தாலையே உனக்கு எப்டிடா சரக்கு கிடச்சுச்சு. அதுவும் இம்புட்டு போதை ஆகுற மாதிரி. எவே தோப்புல ஏறி கள்ளு எறக்குன, இன்னிக்கு எவ எவ வந்து வீட்டு வாசல்ல கத்த போறாளோ. டேய் டேய் எழுந்திச்சி தொலடா”.
கையை கிணத்தடி மேட்டில் ஊன்றி தட்டும், தடுமாறியும், எழுந்தும் எழ முடியாமலும் சோலை எழ, மரகதவள்ளி ஓடிவந்து அவனை பற்றி தூக்க, சோலை அவரையும் இழுத்து கொண்டு பட்டாபட்டியோடு தடுமாற, இந்த சந்தர்பத்தைத்தான் லட்சுமி எதிர்பார்த்து காத்திருந்தது போலும், முன்னத்திங்கால் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொம்பை எக்க சக்க சக்கமாய் சிலுப்பிவிட்டு கழுத்தில் மணி குலுங்க பாய்ந்தோடி வந்து, இருவரின் பின்பக்கத்தில் ஒரே பாய்ச்சல்...
“அய்யய்யோ... அய்யோ, ஐய்யையோ... இந்த பாவிய தூக்க வந்து தேவையா எனக்கு இது. எங்க அவே”. மரகதவள்ளி கிணற்றின் மேல் பிடியில் தொங்க சோலை அவரின் காலை பிடித்து ஊஞ்சல் ஆடுவது போல் தொங்கி கொண்டிருந்தான்.
“பெரிய ஊஞ்சல்ல கயிறு கட்டி ஆடுற சின்னபுள்ளன்னு நினைப்பு. டேய் கிணத்து திண்டு மேல தொங்குனா எதுக்குடா சேலைய புடிச்சு இழுக்கவே. அழகி, அழகி அடியே எங்கடி போன. இதுதா நேரம் பாத்து பழி வாங்குறதா. அடியே கைல சிக்குன...”, லட்சுமி தலையை திருப்பி கொம்பை மீண்டும் சிலுப்ப வள்ளியும், சோலையும் கிணற்றுக்குள் விழுந்தனர்.
இந்த பக்கம் அழகியும், வெய்யோனும் விழுந்து விழுந்து சிரிக்க, “அண்ணா பாவம்ணா போயி தூக்கிவிடலாம்”.
“வேணா விடு அழகி கொஞ்சநேரோ ரெண்டு பேரும் முங்கு நீச்சல் கத்துக்கட்டும். உன்ன எவ்ளோ கொடுமை படுத்திருக்குதுங்க இந்த ரெண்டும். அதுக்களுக்கு நல்லா வேணும்”, வெய்யோன் கூறிவிட்டு அழகியை பார்த்து சிரிக்க, லட்சுமி இந்த கூட்டணியில் இணைந்து தலையை சிலுப்பி ஆட்டியது.
“ஆமா இதுங்க ரெண்டும் எங்க இன்னுமா சைட் அடிக்குதுங்க”.
மெல்ல பம்மி முன்னால் சென்ற வெய்யோன், நிலவன் காதில் கத்த,
“ப்ச்.... ஆ எவண்டா அவே இந்த நேரம் மனுஷே உசுர வாங்குறது”. எட்டி ஒரு மிதி, காதோடு சேர்த்து ஒரு அப்பு.
“என்ன மண்டைக்கு மேல குருவி பறக்குது. இன்னும் பொழுது சரியாவே விடியலேயே அப்புறம் எப்டி குருவி. ஆமா நா அங்கதான இருந்தே எப்டி புதருக்குள்ள வந்தே”, இரண்டு நிமிடம் பொறிகலங்கி நிதானம் வந்த பிறகு, “ஓ சண்டியர் ராசா டிஸ்டப் பண்ணோம்னு அடிச்சுபுட்டாரோ. என்ன அடி. எங்கப்பாரு கூட இப்டி அடிக்கமாட்டாரு. பொண்ணையும் குடுத்துட்டு இவங்கிட்ட இனாமா மிதி வாங்குற ஆளு நானாதா இருப்பேன்”. வெய்யோன் கன்னத்தில் கை வைத்தபடியே புலம்பினான்.
அழகி அவர்கள் இருவரின் மோன நிலையையும் கலைத்து நிகழ் காலத்திற்கு கூட்டி வந்தாள்.
“என்னண்ணா, வெய்யோன் அண்ணாவ இப்டி அடிச்சு தள்ளிட்டிங்க. பாருங்க குப்பை எது, அண்ணே எதுனே தெரில”.
“ன்னாது... மச்சான் இங்க வந்தானா அவன அடிச்சுபுட்டேனா. டேய்... டேய்... டேய் மச்சா... எங்கவே இருக்க. தெரியாம கை பட்டுருக்கும்வே. வா இங்க வந்துரு”.
“அண்ணா, டேய் அண்ணா. இனிமே வரதட்சனைக்கு ப்ரீயா அடி குடுக்காதேனு மாமாகிட்ட சொல்லிடுறேண்டா. எங்கடா இருக்க, வாடா”.
தலையை போட்டு அழுத்தி கொண்டிருந்த குப்பையை தூக்கி எறிந்தவன், “நா இங்க இருக்கேன். டேய் மாப்பிள்ளை உன்னலாம் நம்பி புள்ளைய கட்டி குடுக்க கூடாது. இப்டியா அடிப்ப”.
“நாங்க பேசிட்டு இருக்கும்போது நீ ஏன்டா உள்ள வந்த”, துகிரா சொல்ல,
அவளை முறைத்தவன், “நீங்க பேசிட்டு இருந்திங்க”.
“ஹா... ஆமா பேசிட்டு”.
அருகில் இருந்த சுவற்றில் முட்டியவன், "உனக்கும் ஒரு வத்தலோ, தொத்தலோ இருந்துருந்தா இப்டிலாம் இது என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு இருக்குற மாதிரி இருக்குமா”, வெய்யோன் கோவத்தோடு எழுந்து போக,
நிலவன் அவனை சமாதானம் செய்து கொண்டு பின்னே செல்ல, துகி, அழகியை கட்டிக்கொண்டாள்.
விழியழகிக்கு சிறுவயது முதலே உற்ற தோழியாய், தாயாய், பாதுகாவலனாய் கண்ணுக்கு கண்ணாய் இமைக்குள் வைத்து பொத்தி பாதுகாத்தவள் துகிரா. ஒருவருக்கொருவர் இக்கட்டான சூழ்நிலையில் தளர்ந்து போய் நிற்கும் போது ஒருவர் மற்றொருவரை கைபிடித்து தூக்கிவிடும் ஓர் அழகிய உன்னதமான உறவுதான் இவர்கள் இருவருக்குள்ளும்.
தன் தாய்க்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாமல் தானே அவர்கள் உயிரை விட்டார்கள். அதனால் தானே நான் நிற்கதியாய் நிற்கிறேன். என் நிலை எந்த பெண் பிள்ளைக்கும் வரக்கூடாது. வரவே கூடாது. வர விடமாட்டேன். தமிழகத்தில் நடந்த ப்ளஸ் டூ பொது தேர்வில் இவள் தான் நம்பர் ஒன். அதற்கு அடுத்த இடம் துகிரா. இருவரும் பெங்களூருவின் மருத்துவ கல்லூரியில் சென்று படிக்கத்தான் ஆசையாய் காத்து கொண்டிருக்கிறார்கள்.
பெங்களூருவில் ஒருவன் இவளை நினைத்து சித்தம் கலங்கி தவிக்கிறான்.
இவளை நேரில் பார்க்கும் நாளுக்காக துடியாய் துடிக்கிறான்...
இவளும் அங்குதான் செல்ல போகிறாள்...
ஆனால்...
அசைவுகள் தொடரும்...