அத்தியாயம் - 8 :
“சரிங்க சார்…” அவர் சொன்னதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்ட மிருதுளா பின்னர் அவரிடம் “சார் நாம இதுவரைக்கும் சக்கரவர்த்தி குரூப்புக்கு ஆடிட் பண்ணது இல்லையே… நம்மளோட புது கிளைண்ட்டா சார்…” என்று கேட்டாள்.
“ஆமாம்மா மிருதுளா… சக்கரவர்த்தி குரூப்புக்கு இதுவரை ஆடிட்டராக இருந்த மிஸ்டர் சுந்தரம் தன் மகனோட வெளிநாடு போய் செட்டில் ஆக போறதா சொல்லிட்டாராம்… அதனால சக்கரவர்த்தி குரூப் என்ன அப்ரோச் பண்ணாங்க… நானும் ஒத்துக்கிட்டேன்… நாம மட்டும் அவங்களுக்கு திருப்தி தர மாதிரி வேலை பார்த்து கொடுத்தா அவங்க தங்களோட குரூப்க்கு கீழே உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் நம்மையே ஆடிட் பண்ண நியமிக்கறதா சொல்லி இருக்காங்க… அதனால நாம இந்த வேலைய நல்லபடியா முடிக்கணும் மிருதுளா…”
“ஓகே சார்… என்னோட யார் வராங்க…” என்று மிருதுளா கேட்டதும்
“உன்னோட அமிர்தா வந்திருக்கணும் மிருதுளா… ஆனா அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அவளின் நிச்சயதார்த்தத்திற்காக போன வாரமே அவ என்கிட்ட ஒரு வாரம் விடுமுறை வேணும்னு கேட்டா… நானும் ஓகே சொல்லிட்டேன்… அருணும் ஷங்கரும் பெங்களூர் போயிருக்காங்க… ஷீலாவும் ரகுவும் டெல்லி போயிருக்காங்க… அவங்க திரும்பி வர எப்படியும் பதினைந்து நாட்களாவது ஆகும்… அதனால இப்போதைக்கு நீ மட்டும் போ மிருதுளா… அமிர்தா விடுமுறை முடிந்து வந்த பிறகு உன்னோட ஜாயின் பண்ணிப்பா…” என்று அவர் சொன்னதும்…
“சார்… அவங்க எவ்வளவு பெரிய குரூப்… அங்க நான் மட்டும் போனா அவங்க நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்க… என் கூட யாராவது வந்தா பதினைந்து நாளில் முடிக்க வேண்டிய வேலையை நாங்கள் ஒரு வாரத்தில் முடித்து விடுவோம்… அவங்களுக்கும் நம்ப மேல நல்ல அபிப்ராயம் ஏற்படும்… அதனால டெல்லி அல்லது பெங்களூரில் இருந்து யாரையாவது வரவழைக்க முடியுமா சார்…” என்று சற்று தயங்கியபடி கேட்டாள்.
‘ ஐயோ கடவுளே… கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம பேசுதே இந்த பொண்ணு… இந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியாதா… ஆனா அந்த மகாதேவன் மிருதுளா தான் வரணும்… அதுவும் கூட வேற யாரும் வராத மாதிரி பாத்துக்கணும்ன்னு சொல்லிட்டாரு… இந்த விஷயம் எதுவும் தெரியாம இந்த பொண்ணு துணைக்கு ஆள கேட்குதே… நான் என்ன பண்றது….’ என்று மானசீகமாக தலையில் கை வைத்தவர்
பின்னர் அவளை பார்த்து, “மிருதுளா அவங்கள வரவழைக்க முடிஞ்சிருந்தா நான் வரவழைத்து இருப்பேனே… இப்போதைக்கு அவங்க இங்க வர முடியாது… முதலில் நீ மட்டும் போய் வேலையை தொடங்கு… ஒரு வாரம் கழித்து அமிர்தா உன்னோட வந்து ஜாயின் பண்ணிப்பா… நான் அவங்க கிட்ட பேசிக்கிறன்… அவங்க நம்மோட சூழ்நிலையை புரிஞ்சுப்பாங்க…” என்றதும் மிருதுளாவும் மறுப்பேதும் சொல்லாமல், “சரிங்க சார்… அப்போ நான் நாளைக்கு காலையிலேயே போயிடறன்…” என்றவள் அவரின் அறையை விட்டு வெளியேறினாள்.
தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவள் வேலையை தொடராமல் ஏதோ யோசனையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த அமிர்தா, “என்ன டார்லிங்… சக்ரவர்த்தி குரூப்புக்கு எப்படி தனியா போறதுன்னு யோசிக்கிறியா…” என்று கேட்டாள்.
அமிர்தாவின் பேச்சில் தன்னுணர்வு திரும்பிய மிருதுளா, “ஆமா அமிர்தா… இதுவரைக்கும் நான் எந்த கம்பெனிக்கும் தனியா ஆடிட் பண்ண போனது இல்ல இல்லையா…. அதான் ஒரு மாதிரியா இருக்கு…”
“என்ன ஒரு மாதிரியா இருக்கு…. இல்ல என்ன ஒரு மாதிரியா இருக்குன்னு கேக்கறன்… இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எல்லாம் எப்பவாவது ஒரு முறை தான் வாழ்க்கையில் வரும் தெரியுமா? உனக்கு எங்க அதைப் பற்றியெல்லாம் தெரியப் போகுது…” என்று சொன்ன அமிர்தா போலியாக பெருமூச்சை வெளியேற்றினாள்.
“ஏய்…. வாய மூடு… எப்போ பார்த்தாலும் லூசு மாதிரி எதையாவது உளறுவதே உனக்கு வேலையா போச்சு… உன்னோட வேலையையும் சேர்த்து நானே பாக்கணும்… இதுல என்ன அதிர்ஷ்டம் இருக்கு… உண்மையிலே இது என்னோட துரதிர்ஷ்டம்தான்…” என்று அமிர்தாவை பார்த்து கடுப்புடன் சொன்னாள்.
“இப்போ உனக்கு தான் நான் என்ன சொல்ல வரேன்னு புரியலை… சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸின் ஹெட் ஆஃபீஸ்க்கு ஆடிட் பண்ண போற… அப்போ சக்ரவர்த்தி குரூப்போட சிஇஓ தேவ்வை பார்த்து பழகுற சந்தர்ப்பம் உனக்கு கிடைக்கும்… அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா… அவர பார்க்கிற வாய்ப்பு நமக்கு கிடைக்கிறதே நாம பண்ண அதிர்ஷ்டம்… அவர் அவ்வளவு அழகா இருப்பாராம்… அவர தன்னோட வலையில வீழ்த்த எத்தனை பொண்ணுங்க வலை விரிக்கிறாங்கன்னு உனக்கு தெரியுமா… அப்பேர்பட்ட ஆணழகனை பார்த்து பழகுற சந்தர்ப்பம் கிடைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்… இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் என்னோட மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க ஒத்திருந்திருக்க மாட்டேன்… என்ன பண்ண நான் இப்ப கமிட் ஆயிட்டேன்… ஆயிரம் இருந்தாலும் நான் தமிழ்நாட்டு பொண்ணு இல்லையா… கல்யாணம் பண்ண போறவனுக்கு துரோகம் பண்ண மனசு வரல… இதே நான் சிங்கிளா இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் தேவ் என்கிற அந்தப் பெரிய திமிங்கலத்தை வலைவீசி பிடிக்க முயற்சி பண்ணி இருப்பேன்… என்ன பண்ண… எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்… எனக்கில்ல… தேவ் எனக்கில்ல…” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டவளைப் பார்த்து மிருதுளா வாய்விட்டு சிரித்தாள்.
“ஏய்…. போதும் நிறுத்து உன்னோட நாடகத்தை… இந்த தேவ் மட்டும் இல்ல பில்கேட்ஸ் வந்தாக்கூட நீ அவரைத் திரும்பிப் பார்க்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… எப்படி எப்படி உன் மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க ஒத்திருந்திருக்க மாட்டியா… வயசுக்கு வந்த நாள்ல இருந்து விடாம உன் மாமா பையனை சைட் அடிச்சு… அப்புறம் லவ்வ சொல்லி… இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நீ… அப்படிப்பட்ட நீ உன் மாமா பையனை விட்டுட்டு தேவ்வை வலைவீசி பிடிக்க முயற்சி பண்ணி இருப்பியா… அந்த தேவ் எப்படிப்பட்ட ஆணழகன்… அவனுக்கு மார்க்கெட்டில் எந்த அளவிற்கு டிமாண்ட் இருக்கு… இத பத்தி எல்லாம் என்கிட்ட சொல்ல விரும்பினால் நேரடியா சொல்லிட்டு போ… அதை விட்டுட்டு எதுக்கு இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடற… அதுவும் உன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்ச என்கிட்டயே…” என்று மிருதுளா சொன்னதும் அமிர்தா அவளைப் பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
ஆம்… மிருதுளா சொல்வது உண்மைதான்… சிறு வயதிலிருந்தே தன் மாமா பையனை விரும்பிய அமிர்தா அனைவரின் சம்மதத்துடனும் இன்னும் மூன்று மாதங்களில் அவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள்… அப்போது அமிர்தாவுக்கு அவள் போனில் அழைப்பு வரவே அவள் அதை எடுத்து பேச தொடங்கினாள்… அதன் பிறகு அவர்கள் இருவருக்குமே பேச நேரம் கிடைக்கவில்லை…
மறுநாள் சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமையகத்துக்கு சென்ற மிருதுளா அங்கு வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தான் மகேஷ் அசோசியேட்ஸில் இருந்து வந்து இருப்பதாக சொன்னதும் அவர் மிருதுளாவை மகாதேவனை சென்று சந்திக்கச் சொன்னார்.
பொதுவாக தேவ் இதுபோல் ஆடிட் பார்க்க வருபவரை எல்லாம் சந்திப்பது இல்லை… ஆனால் மிருதுளாளை இங்கு வரவழைப்பதற்காகவே அவளின் ஆடிட்டரை தங்கள் கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக அப்ரோச் செய்து அவரிடம் பேசி மிருதுளாவை இங்கு வரவழைத்தவன் அவளை பார்த்து பேசாமல் இருப்பானா என்ன?
மிருதுளா மகாதேவனை சென்று சந்தித்ததும் அவர் அவளை தேவ்வின் அறைக்கு அழைத்து சென்றார். மிருதுளாவிற்கு அவரின் இந்த செயல் வினோதமாக பட்டது… பொதுவாக சிறிய நிறுவனங்களுக்கு அவள் ஆடிட் செய்ய நேரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியை அவளால் சந்திக்க முடியும்… ஆனால் இது போன்ற பெரிய நிறுவனங்களில் அதற்கு சாத்தியமில்லை…. அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கோ அல்லது அந்த கட்டிடத்திற்குள் அவர்கள் வரும்போதோ… இது போன்ற தருணங்களில் தான் நிறுவனத்தின் முதலாளியை பார்க்க முடியும்… அதனால்தான் மகாதேவனின் செயல் அவளுக்கு வினோதமாக பட்டது… ஆனால் மிருதுளா அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை… ஒருவேளை அவள் அப்போதே அதைப் பற்றி இன்னும் தீவிரமாக யோசித்திருந்தால் அவளுக்கு இந்த நிலை வந்திருக்காது என்னவோ?
மிருதுளா அந்த கட்டிடத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவளையே சிசிடிவி கேமிரா வழியாக பார்த்துக் கொண்டிருந்த தேவ்வின் கண்கள் தனது இரையை பார்த்துவிட்ட சந்தோஷத்தில் மின்னியது… மகாதேவனை சென்று சந்தித்த மிருதுளாவை தான் சொன்னபடி அவர் தனது அறைக்கு அழைத்து வருவதை கேமரா வழியாக பார்த்தவன் அவர்கள் தன் அறையை நெருங்கிவிட்டதை உணர்ந்ததும் தன்னுடைய கணினியில் மும்முரமாக வேலை பார்ப்பவன் போல நடிக்க தொடங்கினான்.
மகாதேவன் அவன் அறைக் கதவை தட்டியதும்,” கம் இன்” என்று சொன்னவன் அப்போதும் வேலை பார்ப்பதைப் போலவே நடித்துக் கொண்டிருந்தான்.
‘என்னமா நடிக்கிறார்…’ என்று நினைத்த மகாதேவனால் அதை வெளியே சொல்லி விட முடியுமா என்ன?
“சார்… இவங்க மிஸ் மிருதுளா… மகேஷ் அசோசியேட்ஸில் இருந்து வந்து இருக்காங்க… நம்முடைய புதிய ஆடிட்டரிடம் இருந்து வருபவர்களை உங்க கிட்ட கூட்டிட்டு வர சொன்னீங்களே…” என்று மகாதேவன் சொன்னதும் கணினியின் புறம் இருந்த தன் பார்வையை மிருதுளாவின் புறம் திருப்பியவன் தன் கண்களில் ஒரு நொடி தென்பட்ட குரூரத்தை உடனடியாக மறைத்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி “டேக் யுவர் சீட் மிருதுளா…” என்றான்.
பின்னர் மகாதேவனை பார்த்து, “மகாதேவன் மேம்பாலம் கட்ட கவர்மெண்ட் கொட்டேஷன் கேட்டு இருந்தாங்களே… இன்னைக்குதான் கொட்டேஷன் சப்மிட் பண்ண வேண்டிய கடைசி நாள்… கொட்டேஷன் தயாராகி விட்டதா பாருங்க…” என்று அவன் சொன்னதும்
அவன் வார்த்தைகளின் இடையே இருந்த அர்த்தத்தை படித்த மகாதேவன், “ கொட்டேஷன் தயாராகிவிட்டதா என்று பார்த்துட்டு வந்துடறேன் சார்…” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.
அவர் அறையை விட்டு வெளியேறியதும், “மிருதுளா நீங்க இன்னைக்கு இங்க வருவதாக மகேஷ் சார் சொல்லியிருந்தார்… உங்க கூட வரவேண்டிய அமிர்தா என்பவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்று இருப்பதால் இந்த ஒரு வாரம் முழுக்க நீங்க மட்டும்தான் ஆடிட் பண்ண வருவீங்கன்னு சொன்னார்… பொதுவா இந்த மாதிரி ஆடிட் பண்ண வரவங்களை நான் சந்தித்து பேசுறது இல்ல… ஆனா நீங்க முதல்முறையா இங்க வந்து இருக்கீங்க… அதுவும் தனியா… அதனால ஏதாவது சங்கடமா பீல் பண்ணுவீங்களோன்னு நினைச்சி தான் உங்களை கூப்பிட்டு பேசுறன்… மிருதுளா நான் உங்களுக்கு ஒரு உறுதி தரன்… நீங்க இங்க வேலை பார்க்கும் வரை நீங்க சங்கடப் படுற மாதிரி எதுவும் நடக்காது… ஒருவேளை உங்களுக்கு ஏதாவது பிரச்சினை நேர்ந்தால் நீங்க தாராளமா என்னை நேரடியா அப்ரோச் பண்ணலாம்…” என்று அவன் சொல்லி முடித்ததும்
“சரிங்க சார்… நன்றி…” என்ற மிருதுளா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.