நதி - 02
பசியென்ற சொல்லில் தந்தையின் வாயை கட்டிவிட்டவன் வீட்டினுள் நுழைந்து சாப்பிட அமர்ந்தவன் இருந்த பசிக்கு தகப்பன் பரிமாறிய கறிக்குழம்பை ஒரு பிடிபிடித்தான் ருத்ரேஷ்வரன்.
"டேய் மெதுவா சாப்பிடேன்டா எதுக்குடா பல நாள் பட்டினி கிடந்தவன் மாதிரி பதறுற" தகப்பனின் பேச்சு காதிலே ஏறாதவனாய் சாப்பிட்டவன் வாய் நிறைத்த சோற்றோடு "யோவ் நைனா கண்ணு வைக்காத.." என்றுவிட்டு மீண்டும் சாப்பிட அவரோ தலையிலடித்துக் கொண்டார்.
தன் வயிறார உண்டு முடித்து நிமிர்ந்தவன் பெரும் சத்தத்தோட ஏப்பம் விட அவனை முறைத்தார் வேலன்.
"ஹிஹி.. முறைக்காத நைனா நேத்து நைட்டு சாப்பிட்டது காலையிலையும் ஒன்னும் சாப்பிடல அதான் ஒரு கட்டு கட்டிடேன்" அசடுவழிய கூறியவன் தகப்பனின் மடியில் தலை சாய்த்திட அவர் கரமோ தன்னிச்சையாய் அவன் தலை வருடியது.
தந்தையின் தலைகோதலில் அவர் முகம் பார்த்தவன் "ஏன் நைனா நான் உன்ன ரொம்ப கஷ்டபடுத்துறேனா?"
"ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்" என்றார் சிறு முறைப்போடு.
"ஒன்னு செய்யமாட்டேன் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா கஷ்டபடுத்தலாம்னு யோசிப்பேன்" என இளித்து வைக்க அவன் தலையில் கொட்டினார் அவர்.
"சரி சரி காண்டாகத நைனா சொல்லு நிஜமாலுமே உன்ன கஷ்டப்படுத்துறேனா? இப்பிடி ஊருக்குள்ள சோம்பேறியா சுத்தி திரியுறேன்னு தான் கவலப்படுறீயா?" என்றவனின் குரலின் பேதத்தில் குனிந்து அவன் முகம் பார்த்தார் வேலன்.
தவறு செய்துவிட்டோமோ என்ற தவிப்புடன் தாய் முகம் பார்க்கும் குழந்தையாய் அவர் முகம் பார்த்திருந்தான்.
மெல்ல அவன் தலை கோதியவர்
"நீ சோம்பேறி கிடையாது அப்பு.. நீ ஒரு ஏமாளி உன்ன சுத்தி இருக்குறவன் எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரியாத ஒரு முட்டாள் பேக்கு" என அவனை வாரிட
அவரை முறைத்தான் அவன்.
"நைனா நீ என்ன ரொம்ப டேமேஜ் பண்ற பார்த்துக்கோ" என எகிற அவரோ சன்னச் சிரிப்புடன்
"பின்ன என்னடா எப்போ பார்த்தாலும் உழைக்குற பணத்த அடுத்தவனுக்கே செலவு பண்ற உனக்குன்னு எதுவுமே வெச்சிக்காம இப்படியே ஊருக்கு சேவகம் செஞ்சிட்டு இருந்தா உன்ன அப்பிடித்தான் சொல்லலாம்" சிரிப்புடன் ஆரம்பித்து முறைப்புடன் முடித்தார்.
"நைனா நான் யாருக்கு பண்றேன் நம்ம பயலுங்க தானே நம்ம ஊர்காரனுங்களுக்கு தானே பண்றேன் இதுல என்ன தப்பு இருக்கு" என நியாயம் கேட்டான்.
"டேய் நீ கொடுக்குறத தப்பா சொல்லல அப்பு.. ஆனா நீ கொடுக்குறதுல ஒரு குடும்பம் வாழுதா அது சந்தோஷம் ஆனா உன்னோட உழைப்பை சுரண்டி அவனுகள் குடியும் கூத்துமா இருக்கானுங்களே அததான் சொல்றேன்." என்றார் அவனுக்கு புரிய வைத்திடும் நோக்கில்.
"ம்ம் நீ சொல்றது சரிதான் நைனா ஆனா யாருமே என்கிட்ட உதவின்னு வந்து கேட்டா மறுக்க முடியலையே.. இது கூட என் தப்பு இல்ல எல்லாம் உன்னோட ஜீன்ல இருந்து தான் வந்திருக்கும்" என அவர் மீதே பழி போட்டவனை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் பார்த்தவர் பின் பெருமூச்சுடன்,
"அப்பு நைனா சொன்னா கேப்பியா" என்றார்.
அவனோ தலை நிமிர்த்தி அவர் முகம் பார்த்து "சொல்லு நைனா நீ சொல்லி கேக்காம இருப்பேன்னா" என்க
அவரோ "ம்க்கும் ஆமா அப்பிடியே கேட்டுட்டாலும்" என முறுக்கிக் கொண்டு முகம் திருப்பிட அவரை தாஜா செய்து சமாளித்தவன் என்ன எனக் கேட்டான்.
"அப்பு எனக்கு தெரிஞ்ச நண்பன் ஒருத்தன் சென்னைல இருக்கான்டா அவன் கிட்ட உனக்கு ஒரு வேல பார்க்க சொல்லியிருந்தேன் அவனும் பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லியிருந்தான். நேத்து அவன் கால் பண்ணி ஒரு வேலை இருக்குன்னு சொன்னான்" என்றவரை பார்த்தவன்
"ம்ம் என்ன வேலையாம்" எனக் கேட்க.
வேலனோ மகிழ்ச்சியுடன் "ட்ரைவர் வேலை" என்றார்.
அவ்வளவும் தான் பட்டென்று அவர் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தவன் "என்னாது ட்ரைவர் வேலையா" என அதிர்ச்சியாய் கேட்க.
அவரும் "ஆமா அப்பு மாசம் முப்பதாயிரம் கிடைக்குமாம்" என்றார்.
"யோவ் நைனா ஒரு தமிழ் பட்டதாரிய போய் ட்ரைவர் வேலை பார்க்க சொல்றீயா நீ.. நோ நோ என்னால முடியாது" என முறுக்கிக் கொண்டான்.
"ஆமா பெரிய பெத்த படிப்பு.. நீ படிச்ச படிப்புக்கு தான் எந்த வேலையும் கொடுக்க மாட்டேனு சொல்லிட்டானுங்களே.. அப்புறம் என்ன வெட்டி வீராப்பு உனக்கு" என்றவரை முறைத்தவன்
"நீ என்ன சொன்னாலும் சரி நான் அந்த வேலைக்கு போகமாட்டேன்" என்றவன்
அவர் எவ்வளவு கூறியும் அடமாய் நின்றான்.
அதில் வேலனுக்கோ சிறு கோபம் முளையிட "அப்போ சரி.. நான் சொல்றத கேக்க முடியாதுல இனி உனக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை நீ யாரோ நான் யாரோ" என்றார்.
எப்போதும் போல் அவர் முறுக்கிக் கொள்ள அவனும் "சரி நைனா நீ பேசாத நான் பேசுறேன். இப்போ எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு போய்ட்டு வரேன் சரியா" என்றவன் வெளியேறிச் சென்றான்.
அவனுக்கு தந்தையின் கோபம் எப்போதும் போல சிறு பிள்ளைத் தனமாய் தான் தெரிந்தது. அவரது கோபமெல்லாம் காலையில் சண்டையிட்டு மதியம் வரை மட்டுமே நீடிக்கும் அப்படியிருக்க அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளாதவனாய் வெளியேறிச் சென்றான்.
வேலனோ போகும் அவனை பார்த்திருந்தவர் ஒரு முடிவுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியேறிச் சென்றார்.
நேரம் செல்ல வீடு வந்த ருத்ரேஷ்வரனோ வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு புருவம் சுருக்கி நின்றான்.
ஒரு போதும் இல்லாது வீடு பூட்டியிருந்ததில் யோசனையோடு நின்றவன் அழைப்பில் தந்தையை அழைக்க மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
"பார்ரா" என முணுமுணுத்துக் கொண்டவனாய் மீண்டும் அழைப்பை ஏற்றவனுக்கு பலன் என்னவோ பூஜ்ஜியமே.
"என்னாச்சு இந்த நைனாக்கு எதுக்கு போன கட் பண்ணுது" வாய்க்குள் முணுமுணுத்தவாறே நின்றவனுக்கோ பட்டென்று மதியம் நடந்தது நினைவில் மின்னியது.
"அட இன்னுமா கோபம் குறையல" என நினைத்துக் கொண்டவன் அவர் வழமையாய் செல்லும் இடங்களுக்கு தேடிச் சென்றவனுக்கு ஏமாற்றமே கிட்டியது.
மாலையும் ஆகிவிட இன்னுமே வீடு திரும்பாத தந்தையை எண்ணி அவனுக்குள் பயம் கவ்விக் கொண்டது.
அதற்கு மேல் எங்கு சென்று தேட என்று தெரியாதவனாய் வீட்டின் முற்றத்தில் தலையில் கைவைத்து அமர்ந்தான்.
நேரம் கடக்க இரவு பத்துமணியளவில் வீட்டின் வெளிக் கதவை திறந்து கொண்டு உள்நுழைந்த வேலனோ வாசலில் அமர்ந்திருந்தவனை கண்டு கொள்ளாது வீட்டினுள் நுழைந்து கொண்டார்.
வீடு வந்த தந்தையைக் கண்டு நிம்மதியோடு எழுந்தவன் அவரைத் தொடர்ந்து உள் நுழைந்தான்.
"எங்க போயிருந்த? உன்ன எங்கெல்லாம் தேடினேன்தெரியுமா?" என அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது படுக்கையை விரித்து சாய்ந்தார்.
"நைனா என்ன தூங்குற சாப்டியா நீ? வா ரெண்டு பேரும் சாப்டலாம் செம்ம பசி பசிக்குது" என்றவன் அவர் கரம் பற்றி இழுக்க அதை தட்டிவிட்டவர் கண்மூடிக் கொண்டார்.
"ப்ச்.. இன்னுமா நைனா உன் கோபம் போகல" சலிப்பாய் கேட்டபடி அவர் அருகே அமர்ந்து கொண்டவன் "நைனா இங்கப் பாரேன்.. உனக்கென்ன நான் வேலைக்கு தானே போகனும் நான் நம்ம ஊர்லயே ஒரு நல்ல வேலையை பார்க்குறேன். சென்னைக்கு எல்லாம் என்னால போக முடியாது" என்றவன் மறுக்க ஒரே காரணம் அவன் தந்தையை விட்டு அவ்வளவு தூரம் பிரிந்து செல்ல முடியாது என்பதே.
அதை அவரிடம் கூறாது அவன் மாற்று யோசனையை கூற அவரோ பிடிவாதமாய் இருந்தார்.
"நைனா.. நைனா" ஐந்து நிமிடம் வரை அழைத்தும் எந்த சத்தமும் இல்லாது விட அவனும் அவர் அருகில் தூங்கிப் போனான்.
அவனது சீரான மூச்சில் அவன் உறங்கிவிட்டான் என உணர்ந்து கண்விழித்தவர் பசியோடு தூங்கும் தன் மகனை ஆதுரமாய் பார்த்தார்.
பசியோடு தூங்கிவிட்டானே என மனம் கவலை கொண்டாலும் இவனை வழிக்கு கொண்டு வருவது இது ஒன்றே வழி என எண்ணிக் கொண்டே மனதை கல்லாக்கிக் கொண்டார்.
அவருக்கும் அவனை ஊரை விட்டு அனுப்ப வேண்டும் என்ற ஆசையில்லையே இதே ஊரில் நல்ல வேலை கிடைத்தாலும் அவன் மீண்டும் மீண்டும் அதே போலவே நடந்து கொள்வான் என்பது அவருக்கு தெரியுமாதலால் வெளியூர்க்கு அனுப்பி வைக்கும் முடிவில் உறுதியாய் நின்றார்.
ஊர்விட்டு ஊர் சென்று மக்களோடு பழகினாலே அவன் அனைவரையும் புரிந்து கொள்வான் என்றெண்ணியவர் விழிகளோ தூங்கும் போது கூட தன்னை அணைத்துக் கொண்டு தூங்குபவனின் மீது படிந்தது.
அவன் தலை வருடியவர் 'உன் அம்மா உன்ன பெத்து போட்டு அவ நிம்மதியா போய் சேர்ந்துட்டா.. அம்மா இல்லங்குற குறையே இல்லாம வளர்க்க எண்ணி உன்ன ஒன்னும் தெரியாதவனா வளர்த்துட்டேன்னு கவலையா இருக்கு அப்பு. உன் வாழ்க்கையை என் துணை இல்லாமலே நீ தனிய நின்னு வாழனும். அதுக்காகத் தான் இதெல்லாம் பண்றேன்' தன் மனதோடு கூறிக் கொண்டவர் அவனருகே தானும் தூங்கிப் போனார்.
அடுத்து இரு நாட்களும் வேலனோ தன் மௌனப் போராட்டத்தை தொடர தவித்துப் போனது என்னவோ ஈஸ்வரனே.
"நைனா பேசேன்.. ஏன் இப்பிடி இருக்க?" என எத்தனை முறை கேட்டும் அமைதியே உருவாய் தான் உண்டு தன் வேலையுண்டு என நாட்களை கடத்தினார்.
எத்தனை முயன்றும் தந்தையின் மௌனப் போராட்டத்தை உடைக்க முடியாது சோர்ந்து போனவன் அடுத்து உதவி கேட்டதோ அவன் அத்தையிடமே.
.....
மதிய நேரம் உணவு உண்ண வீடு திரும்பிய முருகேசனோ அங்கே அமர்ந்திருந்தவனைக் கண்டு
"என்னடா மாப்ள இந்த பக்கம் .. என்ன மறுபடியும் உன் அப்பன் கூட மல்லுகட்டியாச்சா?" தன் வீட்டின் முற்றத்து தாழ்வாரத்தில் கன்னத்திற்கு கையை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்த ருத்ரேஷ்வரன் தோளில் தட்டிக் கொண்டே அமர்ந்து கொண்டார்.
அவருக்கு தான் தெரியுமே.. அப்பன் மகன் குளறுபடி என்றால் மட்டுமே தன் மருமகன் தன் வீட்டு படியேறுவான் என்று.
அவன் புறா தூது அவன் அத்தை அல்லவா.
"சும்மா போ மாமா .. நானே கடுப்புல இருக்கேன்."
"யாரு நீயா கொஞ்ச நேரம் கூட கோவத்த இழுத்துபிடிக்க ஏழாத குழந்தடா மாப்ள நீ நீ கடுப்புல இருக்கியா" என அவன் கன்னம் கிள்ளியவரை முறைத்தான்.
"மாமா இப்பிடி சொல்லி சொல்லியே நீர் ஊருக்குள்ள பரப்பிவிட்ட கதையால தான் எனக்கு இந்த நிலமை" என்றவனை புரியாது பார்த்தார்.
"என்ன பெத்த நைனா நான் இப்பிடி இருக்குறத சொல்லி சொல்லி என்ன ஊரவிட்டு துரத்த பிளான் பண்ணிட்டுயிருக்கு" சோகமாய் கூறியவன் நடந்ததை அவரிடம் விளக்கினான்.
"மச்சான் சொல்றது சரி தானே எவ்வளவு நாளைக்கு இப்பிடியே சுத்தப் போற ஒழுங்கா ஒரு வேல வெட்டிக்கு போகப் பாரேன்" என்றார்.
"நான் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லல மாமா .. இந்த ஊர்லயே வேலை பார்க்குறேன்னு தான் சொல்றேன் ஆனா ட்ரைவர் வேலைக்கு தான் போகனுமான்னு ஒத்தக் கால் தவம் நிற்குறாரு." என்றார் சலிப்பாக.
மாமன் மருமகனின் பேச்சை கேட்டபடி கையில் மோர் குவளையோடு வந்த நாச்சியோ இருவருக்கும் கொடுத்துவிட்டு அமர்ந்தவர் "ஏன் ராசா உனக்கு அந்த வேலை பிடிக்கலையா இல்ல உன் அப்பன விட்டு தூரமா போக முடியாதுன்னு மருகுறியா" மருமகனின் மனம் உணர்ந்தவராய் கேட்க, அத்தையின் முகம் பார்த்தான் ருத்ரேஷ்வரன்.
அவன் பார்வையே அது தான் காரணம் என்றுணர்ந்தவர் முகத்தில் புன்னகை.
தன் மருமகன் அண்ணன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை கண்டு எப்போதும் போல் ஓர் பெருமிதம் அவர் நெஞ்சில் எழுந்தது.
"நான் அண்ணன் கிட்ட பேசுறேன் ராசா நீ விசனப்படாத சரியா?" என்றதும் அவர் கரங்களை பற்றி கொண்டான் ருத்ரேஷ்வரன்.
"எப்பிடியாச்சும் உங்கண்ணன மலையிறக்கிடு அத்தை அவரோட பேசாம எதுவுமே மண்டைல ஓடமாட்டேங்குது." தவிப்போடு கூறியவன் முகம் வருடியவர்.
"எனக்கு உன்னப் போல ஒரு மகன் கிடைச்சியிருக்கலாம் ராசா.. ஆனா அந்த கொடுப்பினை கடவுள் எனக்கு கொடுக்காம போய்ட்டானே" தாய்மையின் தவிப்போடு கூறியவரின் ஏக்கம் அவ்விரு ஆண்மகன்களின் நெஞ்சை தாக்க அவரை கவலையாய் பார்த்தனர்.
அந்த அன்பு நிறைந்த பெண்மணிக்கு ஏனோ கடவுள் தாய்மை என்ற வரத்தை கொடுக்காது செய்திருக்க, குழந்தை செல்வத்திற்காக ஏங்கி நின்றவருக்கென்றே ஒற்றை ஆறுதலாய் வந்தவனே ருத்ரேஷ்வரன்.
எப்போதும் போல அண்ணன் மீது உயிராய் இருக்கும் அண்ணன் மகனைக் கண்டு தனக்கு இப்படியொரு மகன் இல்லையே என்ற கவலை மனதை அழுத்த அது வார்த்தைகளாய் வெளியேறியிருந்தது.
"நாச்சி என்ன பேச்சு இது..நமக்கு வயசு ஏறி போச்சு இதுக்கு மேல குழந்தை இல்லன்னு கவலபட்டு என்னாகப் போகுது விடு பேசாத" என மனைவியை அதட்டினாலும் அவர் குரலிலும் ஓர் ஏக்கம் இழையோடியது என்னவோ உண்மையே.
இருவரையும் மாறி மாறி பார்த்த ருத்ரேஷ்வரன் மனம் கனத்து தான் போனது.
அவன் தந்தைக்கு அடுத்ததாக உயிராய் நேசிக்கும் இரு ஜீவன்கள் கவலை கொண்டிப்பது கண்டு அவன் மனம் வாடினாலும் வெளிக்காட்டாதவன்
"இங்கப் பாருத்தே உன் வயித்துல பொறக்கலன்னாலும் நான்தேன் உம் மகன் உனக்கு புள்ளையே பொறந்திருந்தாலும் நான் தான் உன் மூத்த மகன் சரியா சும்மா எப்போ பாரு மூக்கச் சிந்தாத.." என்றவன் முருகேசனிடம் திரும்பி "மாமோய் இங்காரு உங்களோட வாரிசு நானிருக்கேன். சும்மா சும்மா அத்தைய மிரட்டுற வேலை வெச்சிக்காத.. உம் பையனுக்கு சொத்த சேர்த்து வெச்சி நல்ல பொண்ண பார்த்து அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிவெச்சு பேரம் பேத்திகளை கொஞ்சுறத விட்டுடு இரண்டு பேரும் உட்கார்ந்து அழுகாச்சி சீன் வடிக்கிறிங்களா?" என இருவரையும் அதட்டியவனின் அதட்டலில் இருந்த அக்கறையில் மனம் நெகிழ்ந்து தான் போனர் அவ்விரு தம்பதியினரும்.
"அதுக்கென்ன ராசா.. உனக்கேத்த மாதிரி ஒரு மகாலக்ஷ்மியை பார்த்து ஜாம் ஜாம்னு கல்யாணத்த முடிச்சிடலாம் சரியா" அவன் முகம் வருடி பாசமாய் கூறியதில் மனம் நெகிழ்ந்தவன்.
"ம்ம் அந்த மகாலக்ஷ்மி இப்போ எங்கிருக்காளோ.. சீக்கிரமா கண்ணுமுன்னாடி கூட்டிட்டு வாத்தே" என சன்னச் சிரிப்புடன் கூறியவன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பிச் சென்றான்.
....
சென்னை நடுத்தர
மக்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு.
நான்காவது தளத்தில் அமைந்திருந்த வீட்டில் காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டிருந்தாள் அவள்.
"அந்தாள் எதுக்கு இங்க வந்தாரு? அந்தாள தான் இங்க வரக் கூடாதுன்னு சொன்னேன்ல..இப்போ எதுக்கு வந்தாராம் என்ன பழைய பாசம் பொங்குதோ" என தன்னெதிரே நின்ற தாயை முறைத்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள் மிருணாளினி.
"மிரு பார்த்து பேசு அந்தாளு இந்தாளுன்னு சொல்லாத அவரு உன் அப்பா"
"வாட் த ப***.. யாருக்கு யாரு அப்பா.. அந்தாளயெல்லாம் அப்பானு சொல்லாத.. ஆத்திரமா வருது" என்றவள் அருகிலிருந்த அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை தூக்கி வீசியிருந்தாள்.
"மிரு என்ன பண்ற நீ வர வர உன் கோபத்துக்கு ஒரு அளவே இல்லாம போகுது" ஆத்திரமிகுதியில் கத்தினாள் இளந்தளிர்.
இத்தனை நேரமும் அமைதியாய் நின்றிருந்தவளுக்கு தன் சகோதரியின் இந்தக் கோபத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அவள் கோபத்தில் இரைந்திருந்தாள்.
"யூ ஜஸ்ட் ஷெட்டப்" ஒற்றை வார்த்தையில் தங்கையை அடக்கியவள் தாயின் புறம் திரும்பி "நாம வேணானு தானே தூக்கி போட்டுடு ஒதுங்கி போனாரு இப்போ எதுக்கு திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் பண்றாரு.. நிம்மதியா இருக்குறது பிடிக்கலையாமா?" என்ற போதே அவள் முகம் ஆத்திரமிகுதியில் சிவந்து போனது.
"மிரு இப்போ எதுக்கு இந்தளவு நீ ரியாக்ட் பண்ற.. அவர் வந்தாரு தான் ஆனா நாங்க அவரோட பேசலையே. அதான் திரும்ப போய்ட்டாரே அப்புறம் என்ன" என சலிப்போடு கேட்டாள் இளந்தளிர்.
அவளுக்கோ சின்ன விசயத்திற்கு இத்தனை ஆவேசம் தேவைதானா என்ற எரிச்சல் மண்டியிருக்க அவளோ சாதாரணமாய் கூறியிருக்க.. மிருணாளிக்கோ அது மேலும் கோபத்தை கிளப்பியிருந்தது.
எத்தனை சாதாரணமாய் கூறுகிறாள். அவர்கள் அவரால் பட்ட துன்பத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட்டாளா? அப்படியென்றால் அவர் மீண்டு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வார்களா? அவர்களைப் போல் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?" தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்தியவள் தங்கையை வெறித்துவிட்டு விறுவிறுவென தன்னறைக்குள் நுழைந்து கதவை ஓங்கி அடித்துச் சாத்தியதிலே அவள் கோபத்தின் அளவை பறைசாற்ற விக்கித்து நின்றனர் இருவரும்.
புயலாய் ஆட்டிவித்து சென்ற மூத்த மகளின் இந்த ஆக்ரோஷத்தைக் கண்டு "கடவுளே" என தலையில் கைவைத்துக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்த பத்மாவிற்கோ அத்தனை மனதிலோ அத்தனை கவலைகள் ஆட்கொள்ள அமைதியாய் கண்மூடி இருக்கையிலே சாய்ந்தார்.
தாயின் நிலையை கண்ட இளந்தளிருக்கோ பாவமாய் இருந்த போதிலும் இதற்கெல்லாம் காரண கர்த்தா அவர்கள் தானே அனுபவிக்கட்டும் என மனம் கூச்சலிட அமைதியாய் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
தொடரும்..