தித்திப்பு 11
அழித்திடும்
வரம்தனை
அகழ்ந்திடும்
ஆழி
உன் வருகை....
உள்ளே வந்த அனாயா நேராக மான்சியருகே சென்றாள்.
அவள் அருகே வருவதை கவனித்த நிலவன் சற்று தள்ளி நிற்க அதை ஓரக்கண்ணால் கவனித்தபடியே மான்சியிடம் நலம் விசாரித்தாள் அனாயா.
அவள் கேட்ட அனைத்திற்கும் பொறுமையாக பதில் சொன்ன மான்சி நிலவனை அனாயாவிற்கு அறிமுகப்படுத்தினாள்.
“அனா இவரு நிலவன். உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.” என்று கூற அவனை மேலிருந்து கீழ் வரை கண்களாலேயே அளந்த அனாயா
“ஹேய் நிஜமாவா? இவரு தானே உன்னோட காலேஜ் டேஸ் க்ரஷ்?” என்று கேட்க அப்போது சரியாக ஆதீஷோடு உள்ளே நுழைந்த ப்ரவாஹனின் காதிலும் இது விழுந்தது.
நிலவனுக்குமே அவளின் வார்த்தைகள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால் இதை கேட்ட ப்ரவாஹனுக்கு காதில் புகை வராத குறை தான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தி பழக்கமில்லாத அவனது வதனம் எப்போதும் போல் அமைதியாக இருந்தது.
மான்சிக்கு தான் இச்சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பதென்று தெரியவில்லை. அனாயா அவன் முன்னேயே தன்னை இப்படி கோர்த்துவிடுவாளென்று அவள் எதிர்பார்க்கவில்லை.நறுக்கென்று அனாயாவின் கையை கிள்ளியவள் நிலவனை பார்த்து கஷ்டப்பட்டு சிரித்தாள்.
அவளது செய்கையை ஒருவன் ரசித்துக்கொண்டும் இன்னொருவன் முறைத்துக்கொண்டுமிருக்க அவளோ அதை பதட்டத்தில் கவனித்ததாக தெரியவில்லை.
அன்று ஒருநாள் இரவு மான்சியை மருத்துவமனையில் தங்கச்சொல்லியிருந்ததால் அனாயா மான்சியோடு தங்குவதாக முடிவானது.
பெண்களிருவருக்கும் துணையாக ப்ரவாஹன் இருப்பதாக கூறிட ஆதீஷ் நிலவனோடு ரிசார்ட்டுக்கு கிளம்பினான்.
நிலவனுக்கு கிளம்ப மனமில்லாத போதிலும் தான் தங்குவது சரிப்படாது என்று எண்ணி ஆதீஷோடு கிளம்பியிருந்தான்.
மான்சியுடன் அனாயா அறையினுள்ளே இருக்க ப்ரவாஹன் காரிடோவில் அமர்ந்திருந்தான்.
பெண்கள் இருவரும் உறங்குவதற்காக வெளியே காத்திருந்த ப்ரவாஹன் அவர்கள் உறங்கிவிட்டதை உறுதி செய்துக்கொண்டு மெதுவாக அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான்.
மான்சி மருந்து உட்கொண்ட மயக்கத்தில் ஆழ்ந்து உறக்கத்திலிருக்க அனாயாவோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு மெல்ல கண்களை திறந்து பார்க்க ப்ரவாஹன் உள்ளே வருவது தெரிந்தது.
அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்திட உறங்குவது போல் பாவனை செய்தாள் அனாயா.
அனாயா உறங்குவதை உறுதி செய்துகொண்ட ப்ரவாஹன் மான்சியருகே வந்தான்.
அயர்ந்து உறங்கும் ஸ்லீப்பிங் பியூட்டி போல் அழகாய் உறங்கிக்கொண்டிருந்தவளின் நளினம் விழிகளால் புகைப்படமெடுக்கப்பட்டு அவனின் மனப்பெட்டகத்தில் அழகாய் சேமிக்கப்பட்டது.
சற்று நேரம் அங்கேயே நின்று பார்த்திருந்தவன் விலகியிருந்த அவளின் போர்வை செய்துவிட்டு பெருமூச்சொன்றை வெளியேற்றியபடியே அறையிலிருந்து வெளியேறினான்.
இதையெல்லாம் உறங்குவது போல் பாசாங்கு செய்தபடி கவனித்துக்கொண்டிருந்த அனாயாவிற்கு ப்ரவாஹனின் எண்ணங்களை முழுதாக புரிந்துகொள்ளமுடியாதபோதிலும் மான்சியின் வருகை அவனின் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
அடுத்து என்ன செய்வதென்று யோசனையோடே உறங்கிவிட்டாள் அனாயா.
இங்கு ப்ரவாஹனின் அன்னை சத்யவதியை அன்று காலையிலிருந்து தேற்ற முயன்று மாய்ந்து போனார் பரத்வாஜர்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அழுதுட்டே இருக்கப் போற பேபி?” என்று நொந்து போய் கேட்டவரிடம்
“அந்த வீட்டுல அவங்க மட்டும் தாங்க எனக்கு சார்பாக இருந்தாங்க. அவங்க மட்டும் இல்லைனா நிச்சயம் நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேங்க.” என்று கூற அவரை அமைதிப்படுத்தும் ஆயுதத்தை கையிலெடுத்தார் பரத்வாஜர்.
“ இப்போவரை உன்னோட பாஸ்ட்டை மறக்கமுடியாம கஷ்டப்படுற தானே பேபி? ஐ டிடின்ட் மேக் இட் பேபி.” என்றவரின் குரலில் பரவியிருந்த வருத்தம் சத்யவதியை எப்போதும் போலும் வாயடைக்கச்செய்யுமென பரத்வாஜர் எதிர்பார்க்க அவரோ கடிந்து கொண்டார்.
“என்ன பரத் பேசுறீங்க? நான் எதை பத்தி சொல்லுறேன் ... நீங்க எதை பத்தி பேசுறீங்க. அவங்க என்னோட அம்மா மாதிரி. நான் இப்போ இப்படி உங்ககூட சந்தோஷமாக இருக்க முக்கிய காரணமே அவங்க தான். அப்படிபட்டவங்க முகத்தை கடைசியாக ஒருமுறை கூட பார்க்கமுடியலையேங்கிற கவலை தான் எனக்கு.” என்று சத்யவதியும் வருத்தத்துடனேயே கூற
“பேபி நீ பார்க்கனும்னு நினைச்சி அங்க போனப்போ அந்த வீட்டாளுங்க உன்னை உள்ள விடலையே. இட்ஸ் நாட் யோர் பால்ட் பேபி.” என்று பரத்வாஜர் இதோடு இருபதாவது தடவையாக இதே வாக்கியத்தை சொல்ல
“அவங்க உடம்புக்கு முடியாமல் ஆஸ்பிடல்ல இருக்கும்போதாவது நாம போய் பார்த்திருக்கனும் பரத்.” என்று கூறிய சத்யவதியை பார்த்தவருக்கு தன்னை தானே குட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
சத்யவதியின் இந்த புலம்பலுக்கு காரணமானவர் அவளின் முன்னாள் கணவரின் சித்தி அருந்ததி.
ஆம் சத்யவதிக்கு பரத்வாஜருடன் நடந்தது இரண்டாவது திருமணம்.
முதல் திருமணமென்னும் நரகத்திலிருந்து அவரை அடாவடியாக மீட்டு வந்தே சத்தியவதியை மணம் புரிந்தார் பரத்வாஜர்.
உலகம் தெரியாமல் வீட்டிற்கு அடங்கிய வெகுளிப்பாவையாக வளர்ந்த சத்யவதியை முதலைகள் நிறைந்த அகழிகை போன்றதொரு இடத்தில் மணம்முடித்துகொடுத்தனர் அவரின் உறவுக்காரர்கள்.
பெற்றவர்களின்றி வளர்ந்த விவரம் அறியாப்பெண்ணை விறகொடிய வேலை வாங்கி கொடுமை செய்தனர் அவரின் புகுந்தவீடு. அவரின் முன்னாள் கணவனோ உடல் தேவைக்கு மட்டும் மனைவியை தேடுபவன் மற்ற நேரங்களில் அவள் இருக்கிறாளா இல்லையா என்று கூட கண்டுகொள்வதில்லை.
கூடலின் விளைவால் சத்யவதி கருவுற அதிகபடியான வேலைப்பளு காரணமாக அதைக்கூட அவரால் அறிந்திட முடியவில்லை.
மசக்கை அவருக்குகு மூன்றாம் மாதமே ஆரம்பித்திருக்க அது தந்த அயர்ச்சியில் யாருமற்ற வீட்டில் மயங்கிக்கிடந்தவரை தற்செயலாக அங்கு வந்த அருந்ததி தான் மருத்துவமனை அழைத்து சென்று அவர் கருவுற்றிருப்பதை அறிந்திட வழிசெய்தார்.
ஆனால் அதன்பின்பு கூட சத்யவதியின் புகுந்தவீட்டார் அவர்களின் கொடுமைகள் நிறுத்தவில்லை.
ஒருநாள் அவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக யாருமறியாமல் வீட்டிலிருந்து வெளியேறிய சத்யவதி செல்லும் வழியில் மயங்கி சரிந்திட அவரை காப்பாற்றி மருத்துவமனையில் பரத்வாஜரே சேர்த்தார்.
உறக்கமின்மை, பல நாள் பட்டினி, கர்ப்பகால கோளாறுகளென்று அனைத்தும் சேர்ந்து மிகமோசமாக அவரை பலவீனப்படுத்தியிருக்க அதன் விளைவாக அவர் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே மயக்கநிலையிலிருக்கவேண்டி வந்தது.
அவரின் நிலை கண்டு மருத்துவமனையில் சேர்த்த பரத்வாஜர் தன் ஆட்கள் மூலம் சத்யவதியின் குடும்பம் பற்றி தெரிந்துகொண்டார்.
ஆனால் அவரின் நிலை அறிந்தும் கூட அருந்ததி மட்டுமே சத்யவதியை காண வந்தார்.
வெளிநாட்டு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவருக்கு அவர்களின் சொந்த விஷயத்தில் தலையிடுவது சரியாகப் படவில்லை.
பண உதவி மட்டும் செய்தவர் அதோடு ஒதுங்கிட நினைக்க அவரை சந்திக்க வந்த அருந்ததியின் வருகை அவரது எண்ணத்தை மாற்றியது.
சத்யவதியின் நிலையை பற்றி எடுத்துக்கூறியவர் அவருக்கு உதவுமாறு வேண்ட யாரென்று தெரியாது எவ்வாறு உதவுவது என்று தயங்கிய பரத்வாஜர் சத்யவதியின் நிலைமையை எண்ணி சரியென்றார்.
ஒரு வாரத்திற்கு பின் கண்விழித்த சத்யவதியோ புகுந்தவீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அடம்பிடித்து அங்கு சென்றார்.
பரத்வாஜரும் அவரின் விருப்பப்படியே விட்டிட தன் புகுந்த வீட்டிற்கு சென்ற சத்யவதி அடித்து விரட்டப்பட்டார்.
அவரின் நடத்தையை குற்றம் சாட்டி அவரின் புகுந்தவீட்டார் மீண்டும் அவரை வீதிக்கு தள்ள செல்லும் வழி தெரியாது நடுத்தெருவில் அழுதபடி நின்றவரை அருந்ததி பரத்வாஜரின் பொறுப்பிலுள்ள ஒரு மடத்தில் சேர்த்துவிட்டார்.
பரத்வாஜர் மறுபடியும் ஏதேனும் நடந்தால் சத்யவதியை தன் பொறுப்பிலுள்ள மடத்தில் சேர்த்திடுமாறு அருந்ததிக்கு கூறியிருக்க அவரும் அதன்படியே செய்துவிட்டு பரத்வாஜருக்கு தகவல் சொன்னார்.
மடத்தின் பொறுப்பாளரிடம் சத்யவதியை கவனித்துக்கொள்ளுமாறு கூறிய பரத்வாஜர் அவரை அங்கேயே பணிக்கு அமர்த்துமாறும் கூறியிருந்தார்.
பசி, தூக்கம் மறந்து மாடாய் உழைத்து பழகியவருக்கு மூன்று வேலை சாப்பாடும், வேலையில் கிடைத்த சொற்ப சம்பளமும் அவரின் மனநிம்மதியை மீட்டுக்கொடுக்க போதுமானதாக இருந்தது.
இப்படியே நாட்கள் கழிய ப்ரவாஹனும் பிறந்திட அங்கிருந்து வெளியேற முடிவு செய்திருந்தார் சத்யவதி.
இந்த சொற்ப நாட்களிலேயே இத்தனை வருடங்களாக அவரிடமில்லாத தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திருந்தது.
அதோடு அவரது கடந்த கால வடுக்கள் அவரது இயல்பினை மாற்றியிருக்க ப்ரவாஹனுக்காக தான் தன்னம்பிக்கையோடு இருந்திட வேண்டுமென்று முடிவெடுத்தவர் அம்மடத்தில் பணி புரிந்தபடியே தன் இருப்பிடத்தை மாற்றினார்.
சத்யவதியின் அனைத்து நடவடிக்கையும் அறிந்த பரத்வாஜருக்கு அவர் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. முதலில் சத்யவதியை முதுகெலும்பில்லாத கோழையென்று எண்ணியருக்கு சில நாட்களில் நிகழ்ந்த அவரது மாற்றம் பிடித்திருந்தது. அவரின் செயல்கள் உண்டாக்கிய சுவாரஸ்யம் அவரை சந்திக்க தூண்டிட சத்யவதியை சந்திக்க இங்கு வந்தார் பரத்வாஜர்.
ஆனால் சத்யவதிக்கோ பரத்வாஜர் யாரென்று தெரியாது. அவர் மருத்துவமனையில் கண்விழித்த போது அருந்ததி பரத்வாஜரை பற்றி கூறியிருந்தாரே தவிர அவர் யாரென்று அடையாளம் காட்டவில்லை. அதன் பின்னும் கூட அவரை சந்தித்திடும் சந்தர்ப்பம் அவருக்கு அமையவில்லை.
ஆனால் அவரே தனக்கு உதவியர் என்று மட்டும் தெரியும்.
சத்யவதியை பார்க்க நேரே மடத்துக்கு வந்தார் பரத்வாஜர்.
மடப்பொறுப்பாளர் சத்யவதியிடம் அதை பற்றி தெரிவிக்க அவரும் பரத்வாஜரை காணச்சென்றார்.
சத்யவதியை பார்த்த பரத்வாஜர் சற்று வியந்துதான் போனார். அவர் அன்று பார்த்த சத்யவதிக்கும் இன்று பார்க்கும் சத்யவதிக்கும் பல நூறு வித்தியாசம் இருந்தது.
புயலில் சிக்கி சிதைந்த செடியாயிருந்தவர் இன்று ஆணிவேர் படர்ந்து அஸ்திவாரம் பதித்த ஆலமரம் போல் அத்தனை உறுதியுடனிருந்தார்.
அவரின் இந்த பரிமாற்றம் அவருக்கு ஏனோ கவர்ச்சியாக இருந்தது. அதனை வாய்விட்டு கூறி பாராட்டவும் செய்தார் பரத்வாஜர்.
பின் ப்ரவாஹனை பற்றி விசாரித்தவர் சற்று நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ஆனால் அவர் அப்போது பார்த்து சென்ற தைரியமான சத்யவதி மறுமுறை அவர் பார்க்க வந்தபோது இருக்கவில்லை.
மகனுக்காக தன்னை தைரியமான பெண்ணாக மாற்றிக்கொண்ட சத்யவதி மீண்டும் மகனுக்காக அவரின் புகுந்தவீட்டினரை நாடிச் செல்ல நேர்ந்தது.
சத்யவதியின் புகுந்தவீட்டார் சத்யவதிக்கு மகன் பிறந்தது தெரிந்ததும் தம் வீட்டு வாரிசு சத்யவதியிடம் வளரக்கூடாதென்ற முடிவில் நீதிமன்றத்தை நாடி ப்ரவாஹனின் பொறுப்பை தம்வசப்படுத்த முயன்றனர்.
சத்யவதியும் அவரின் முன்னாள் கணவரும் பிரிந்திருந்த போதிலும் முறைப்படி விவாகரத்து பெறவில்லை. விவாகரத்து பத்திரத்தை அனுப்பியவர்கள் ப்ரவாஹனின் பொறுப்பினையும் தாம் முறைப்படி பெறப்போவதாக கூறினார்.
ஆனால் அவரது முன்னாள் கணவரோ தனியே சத்யவதியை சந்தித்து தான் தவறு செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டதோடு தனக்கு இந்த விவாகரத்தில் விருப்பமில்லையென்றும் கூறி ஏதேதோ கூறி சத்யவதியை சரிகட்டி தன்னோடு வீட்டிற்கு அழைத்து சென்றார்.
ப்ரவாஹனுக்காக என்று விருப்பமில்லாமல் மீண்டும் தன் புகுந்தவீட்டிற்கு சென்ற சத்யவதியை அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக புகுந்தவீட்டு சொந்தம் தாங்கியது.
முதலில் அனைவரையும் தூர நிறுத்தியவர் பின் அவர்களது தொடர் நன்னடத்தையால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.
ஆனால் இதுவொரு சதிவலையென்று அவர் அப்போது அறியவில்லை.
அவர் தெரிந்து கொள்ளும் நாளும் அன்று வந்தது.
சத்யவதியிடம் சில கோப்புகளை கொடுத்த அவரின் முன்னாள் கணவர் கையெழுத்திட்டு கேட்க தன்னை இப்போது நன்றாக நடத்தும் கணவரை முழுதாக நம்பிய சத்யவதியும் என்ன ஏதுவென்று கேட்காது கையெழுத்திட்டு கொடுத்தார்.
கையெழுத்திட்ட மறுநாளிலிருந்தே சத்யவதியின் புகுந்தவீட்டார் தம் சுயரூபத்தை காட்டத் தொடங்கினர்.
மீண்டும் பழைய துன்புறுத்தல்கள் தொடர இம்முறை அவர்களை எதிர்த்தார் சத்யவதி. ஆனால் அந்த எதிர்ப்பு கூட அவர்களின் மனிதாபிமானமற்ற தண்டனைகளால் தன்னிடம் மறந்துபோனது.
சத்யவதியை தண்டித்தவர்கள் ப்ரவாஹனையும் அவளுக்கு எதிராக திருப்பமுயன்றனர். மூன்று வயதே ஆகியிருந்த அச்சிறுபாலகனுக்கு பெரியவர்களின் வன்மம் புரியாமல் அவர்கள் சொல்வது போல் நடந்துகொண்டான்.
இனியும் இங்கிருந்தால் ப்ரவாஹனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிடும் என்ற பயத்தில் ப்ரவாஹனோடு வீட்டை விட்டு செல்ல முயன்றவரை அடித்து துன்புறுத்தி அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதென கூறி சத்யவதியை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டனர்.
தன் மகனை தன் புகுந்த வீட்டார் ஏதேனும் செய்துவிடுவரோ என்ற பயத்தில் தூக்கமின்றி மன அழுத்தத்திற்கு ஆளானவரை ஆதாரிக்க யாரும் இல்லாதபோது அவரின் நிலை பற்றி கேள்விப்பட்டு ஊரிற்கு வந்தார் அருந்ததி.
அவரின் முட்டாள்தனம் கோபத்தை ககிளர்ந்தெழுச்செய்த போதிலும் அவரது தற்போதைய நிலையை எண்ணி அவருக்கு ஆறுதலாக இருந்தார் அருந்ததி.
விஷயம் கேள்விப்பட்டு பரத்வாஜரும் ஊரிற்கு வந்திருந்தார். இம்முறை சத்யவதியை இந்நிலைமக்கு ஆளாக்கியவர்களை தானே தண்டிக்கவேண்டுமென்று முடிவெடுத்தவர் என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டார்.
சத்யவதியின் பூர்வீக சொத்தை கைமாற்றவே அவளின் புகுந்தவீட்டார் இத்தனையும் செய்துள்ளனர். அதோடு தம் குடும்பவாரிசான ப்ரவாஹனையும் அவளிடம் இருந்து முழுதாக பிரிக்கவே அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவளை மனநல காப்பகத்தில் சேர்த்திருந்தனர்.
இவை அனைத்தையும் தெரிந்துகொண்ட பரத்வாஜர் அனைத்தையும் தன் பணபலத்தால் சரிப்படுத்தியதோடு சத்யவதியும் குணமாக வழி செய்தார்.
பின் ப்ரவாஹனை சத்யவதியிடம் ஒப்படைத்தவர் எந்தவித தயக்கமும் இன்றி திருமணத்திற்கு சம்மதம் கேட்க சத்யவதியோ பயத்தில் வெளிறினார்.
அவர் நிலை புரிந்த பரத்வாஜரும் வேறேதும் கூறாது தன் நாட்டை நோக்கி பயணமானார்.
சத்யவதிக்கு குற்றவுணர்ச்சியே அதிகமாகயிருந்தது. கடந்தகால வடுக்கள் அவரை இப்போது மனதளவில் மிகவும் பலவீனமடையச் செய்திருந்தது. சமூகத்திற்கு முகம்கொடுக்கவே பயந்து ஓடிஒளிந்தவருக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை என்ற நினைப்பே அச்சத்தை கொடுத்தது.
ஆனால் தயங்கி மறைய நினைத்தவரை முயன்று முட்டி மோதி கரம்பிடித்துவிட்டார் பரத்வாஜர்.
அதோடு தன் காதலால் அவரை சரிப்படுத்தி மகிழ்ச்சியை மட்டுமே இதுநொடிவரை அனுபவிக்கவும் செய்திருந்தார்.
சத்யவதியை சரிப்படுத்திய பரத்வாஜரால் ப்ரவாஹனை சரிப்படுத்தமுடியவில்லை. அவனின் சிறுபராயத்தின் தாக்கம் அவனின் அன்னையிடமிருந்து அவனை தூரநிறுத்தியது.
ஆனால் அவன் நடவடிக்கைகளுக்கான காரணம் தான் யாருக்கும் புரியவில்லை.
சிறுவர் மனநலமருத்துவரிடம் காட்டியபோதும் கூட அவனிடம் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லை.
அமைதியே உருவாய் வலம் வந்தவன் யாரிடமும் நெருங்கிப்பழகவில்லை.
தன் அன்னை தந்தையிடம் கூட நெருக்கத்தை காண்பிக்கவில்லை. இப்படியிருந்தவன் தன் அன்னையின் கடந்தகாலம் பற்றி அரைகுறையாக தெரிந்துகொண்டு வெடிக்கவும் தவறவில்லை.
சத்யவதி பெரும்போராட்டத்திற்கு பின் உண்மையை விளக்கவும் மீண்டும் அமைதியாகிப்போனான்.
இந்நொடி வரை பெற்றவர்கள் இருவருக்கும் அவனின் இந்த இடைவெளி எதற்கு என்று புரியவில்லை.