இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் - கதைத்திரி

அத்தியாயம் - 13 :

இன்று காலையிலிருந்து நடந்ததையெல்லாம் யோசித்தபடி மாணிக்கம் திண்ணையில் அமர்ந்திருந்தான். தாமரையும் விசாலாட்சியும் எதுவுமே நடக்காதது போல மதியத்திற்கு சமைக்க தொடங்கிவிட்டனர்.

இவ்வளவிற்கு பிறகும் தாமரை இயல்பாக இருப்பதை பார்க்க பார்க்க அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'இதுவே வேற ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரியெல்லாம் நடந்திருந்தா அவ அதுல இருந்து வெளிவர எவ்ளோ நாள் ஆகியிருக்குமோ? ஆனா தாமரை இவ்ளோ சீக்கிரம் சரியாகிட்டா... எது எப்படியோ இதுவும் நல்லதுக்கு தான்' என்று நினைத்தவனின் மனதில் திடீரென்று அந்த கேள்வி தோன்றியது.

'நாங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கும் போது எவன் போட்டோ எடுத்திருப்பான்? அது எப்படி முருகன் கைக்கு போயிருக்கும்? அந்த அளவுக்கா இந்த வீடு பாதுகாப்பில்லாம இருக்கு?' என்று யோசித்தபடி அவன் வீட்டை சுற்றி பார்வையை செலுத்தினான்.

அவர்கள் வீடு ஐந்து சென்ட் நிலத்தின் நடுவே இருந்தது. வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் காலியாக இருந்தது. அவர்கள் வீட்டை சுற்றி எங்கு நின்று அவன் படம் பிடித்தான் என்பதை கணிப்பது மிகவும் கடினம். அதனால் எவன் அந்த புகைப்படத்தை எடுத்தான் என்பதை கண்டுபிடிக்கும் யோசனையை விட்டுவிட்டான் மாணிக்கம்.

'இந்த வீட்டை சுத்தி முதல்ல ஒரு காம்பவுண்ட் கட்டணும். அப்போதான் தாமரைக்கு பாதுகாப்பு' என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் இந்த வீட்டின் உரிமையாளர் அதை விற்க போவதாக சொன்னது நினைவிற்கு வந்தது.

'அடச்சே... இதை மறந்துட்டோமே. நாம இங்க இருக்க போறதே இன்னும் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ. இப்போ போய் காம்பவுண்ட் கட்டணும்னு யோசிக்கிறோமே... ஆனா அடுத்து எந்த வீட்டுக்கு குடி போனாலும் பாதுகாப்பான இடத்துக்கு தான் போகணும்'

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வீட்டின் முன்பு யாரோ பைக்கை நிறுத்தும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் சிந்தனை கலைந்தவன் பார்வையில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்த முருகனும் விசாலாட்சியின் கணவரும் விழுந்தனர்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனருகே வந்த முருகன் "என்னடா... கோவில்ல என்னென்னவோ பேசிக்கிறாங்க?" என்றான்.

அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக தரையை பார்த்தான்.

"மாணிக்கம் என்னாச்சுப்பா?" என்று அவன் சித்தப்பா பதற்றத்துடன் கேட்டார்.

பெருமூச்சை வெளியேற்றியவன் நடந்ததை சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டு கோபத்தில் பல்லை கடித்த ஏழுமலை "அந்த நாய் அப்படியா பண்ணான்? பண்ற தப்பையெல்லாம் அவன் பண்ணிட்டு பழியை உங்க மேல போட்டுட்டானா?" என்றான்.

நெற்றி சுருங்க அவனை பார்த்த மாணிக்கம் "என்னடா சொல்ற?" என்றான்.

"ஆமா மச்சான். அவன் எவளையோ லவ் பண்ணி இருக்கான். அது தெரிஞ்சதும் அவன் அம்மா அவனை உருட்டி மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கு. அவனும் அவங்ககிட்ட ஒத்துக்கிற மாதிரி ஒத்துக்கிட்டு இன்னைக்கு காலையில அவ லவ்வரை கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான். அது தெரிஞ்சதும் அவன் அம்மாக்காரி நெஞ்சை பிடிச்சிக்கிட்டு சரிஞ்சிட்டா. அவளை ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்கு. அதான் யாரும் போனை எடுக்கல" என்று ஆதங்கத்துடன் சொன்னான்.

"அவன் சொல்றதெல்லாம் உண்மையா சித்தப்பா?"

அவர் ஆமென்று தலையசைத்தார்.

"ஆமா மாணிக்கம். எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. நல்ல குடும்பம், நல்ல பையன். தாமரையை அங்க கொடுத்தா நல்லா இருப்பான்னு நெனச்சி தான் நான் இந்த சம்பந்தத்தை சொன்னேன். ஆனா அந்த பாவிப்பய இப்படி பண்ணுவான்னு நான் நெனச்சி கூட பாக்கல" என்று சங்கடத்துடன் சொன்னார்.

சிறிது நேரம் எதையோ யோசித்தவன் "எல்லாம் சரி, ஆனா ஓடிப்போறவன் எதுக்காக எங்க மேல பழியை போட்டுட்டு போனான்?" என்று முணுமுணுத்தான்.

"ஒருவேளை நம்ம ஊர்ல அவனை நல்லவனா காட்டிக்க நினைச்சானோ என்னவோ?" என்றான் முருகன்.

"அவன் எதுக்காக வேணும்னாலும் இப்படி பண்ணியிருக்கட்டும். ஆனா அவன் மட்டும் என் கையில சிக்கினான் அன்னைக்கு தான் அவன் இந்த பூமியில உயிரோட இருக்க கடைசி நாள்" என்று கோபத்தில் கண்கள் சிவக்க சொன்னவனை பார்த்து ஏழுமலைக்கே பயமாக இருந்தது.

"ஐய்யயோ... இவ்ளோ கோவம் வேண்டாம் மச்சான். அவன் எப்படியோ போய் தொலையட்டும். நீ உன் வாழ்க்கையை பாரு. யோசிக்காம எதையாவது செஞ்சி வச்சிடாத. அப்புறம் தாமரை வாழ்க்கை என்னாகிறது?"

அவனை சமாதானப்படுத்தினான் ஏழுமலை. மாணிக்கம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

அவர்கள் பேச்சு சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த விசாலாட்சி தன் கணவனை பார்த்ததும் "போனா சீக்கிரம் வரமாட்டீங்களா? போனா போன இடம்... வந்தா வந்த இடம் தான் உங்களுக்கு... நீங்க போய்ட்டு வரதுக்குள்ள இங்க என்னென்ன கூத்து நடந்துடிச்சி தெரியுமா?" என்றார்.

"தெரியும் ஆச்சி... கோவிலுக்கு போய்ட்டு தான் இங்க வரோம். வந்ததும் என்ன நடந்துச்சுன்னு மாணிக்கம் சொன்னான்"

"அதுசரி அந்த பையன் ஏன் அப்படி பண்ணானாம்? ஒருவேளை அவனுக்கு இவங்க மேல சந்தேகம் இருந்திருந்தா அதை நம்மகிட்ட முன்னவே சொல்லியிருக்கலாம் இல்லையா? இப்படி ஊரை கூட்டி அசிங்கப்படுத்திட்டானே"

ஒன்றுமறியாதவர் போல அவர் பேசியதை நம்பி அவர் கணவரும் நடந்ததை சங்கடத்துடன் சொன்னார்.

"ஓஹ்... அவன் சந்தோஷமா வாழ நம்மவீட்டு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க நினைச்சானா? ஆனா தெய்வம்னு ஒன்னு இருக்குங்க. அது இருக்கும் போது மனுஷன் நினைச்சதெல்லாம் நடக்குமா என்ன? அவன் என்ன நினைச்சு இதை பண்ணானோ... ஆனா தாமரைக்கு அவளை தங்க தட்டுல வச்சு தாங்கற புருஷன் கிடைச்சிருக்கான்" என்றவர் பின்னர் "சரி நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா?" என்றார்.

"போன இடத்துல தெரிய வந்த செய்தியில பசியே மரத்துப் போச்சு. இதுல எங்க சாப்பிட?"

"மணி ரெண்டாகப் போகுது. இன்னுமா சாப்பிடலை ரெண்டு பேரும். சரி உள்ள வாங்க. சாப்பாடு தயாரா இருக்கு. வந்து சாப்பிடுங்க" என்றதும் அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர்.

மாணிக்கம் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தான்.

"மாணிக்கம் உனக்கு வேற தனியா சொல்லணுமா? வாப்பா... வந்து சாப்பிடு"

"எனக்கு பசியில்லை சின்னம்மா... நீ போ. போய் அவங்களை பாரு"

"இங்க பாரு இப்போ மட்டும் நீ வரல, தாமரை வந்து காலையில பேசின மாதிரி ஏதாவது பேசி வைப்பா. உனக்கு அதுதான் வேணும்னா இப்படியே இரு" என்றதும் அவரை அதிர்ந்து போய் பார்த்தவன் அடுத்த கணம் எழுந்தான்.

மீண்டும் அப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்க அவன் விரும்பவில்லை.

"அட... பொண்டாட்டி பேரை கேட்டதும் இவ்வளவு நேரம் இல்லாத பசி வந்துடுச்சு போல என் பையனுக்கு" என்று நக்கலடித்தவரை சலிப்புடன் பார்த்தவன் "நீ வேற என் நிலைமை புரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க சின்னம்மா. எங்க அவ திரும்ப ஏடாகூடமா எதையாவது பேசி வைப்பாளோன்ற பயத்துல தான் வரேன்" என்றான்.

அவனை கனிவுடன் பார்த்தவர் "இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீ இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்க?" என்றார்.

"எங்க மானம், மரியாதை முக்கியமா தாமரையோட மானம், மரியாதை போயிடிச்சே. கப்பல் கவிழறதை விட இது பெருசில்லையா?"

"இங்க பாரு இந்த உலகத்துல அடுத்தவனை குத்தம் சொல்ற அளவுக்கு ஒருத்தனுக்கும் தகுதியில்லை. தன் முதுகுல இருக்க அழுக்கை பார்க்காம அடுத்தவன் முதுகுல இருக்க அழுக்கை பத்தி பேசறவனை பத்தி, அவன் சொன்னதை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு உன் வாழ்க்கையை பத்தி யோசி. தாமரையை எப்படி நல்லா வச்சிக்கணும்னு யோசி. அதான் உனக்கு நல்லது. புரிஞ்சுதா?"

அவர் சொல்வதெல்லாம் அவனுக்கே தெரியும் தான். ஆனால் அதை செயல்படுத்தத் தான் முடியவில்லை

பெருமூச்சை வெளியேற்றியவன் எதுவும் பேசாமல் அவரை தாண்டி உள்ளே சென்றான். அவரும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இன்று நடந்ததை ஜீரணிக்க அவனுக்கு சற்றே காலமெடுக்கும் என்று புரியாதவரா அவர்?

மூவரும் அமர்ந்ததும் "தாமரை எல்லாத்தையும் கொண்டு வாம்மா" என்று குரல் கொடுத்தார் விசாலாட்சி.

தாமரை அனைத்து உணவு பாத்திரங்களையும் கொண்டு வந்து வைத்தாள். பாத்திரங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போதே விருந்துக்கு தயார் செய்வது போல சமைத்திருப்பது புரிந்தது.

"எதுக்காக இப்போ இவ்ளோ சமைச்சிருக்க சின்னம்மா? சிம்பிளா எதையாவது செஞ்சிருக்க கூடாதா?" என்றான் மாணிக்கம்.

"புதுசா கல்யாணமானவங்களுக்கு முத முதல்ல ஆக்கிப் போடும் போது இப்படித்தான் வடை, பாயசத்தோட விருந்து சமைச்சு போடணும்டா. உனக்கு இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. வாயை மூடிக்கிட்டு போட்டதை சாப்பிடு" என்று அதட்டியவர் தாமரையிடம் "நீ போய் அவன் பக்கத்துல உட்காரு தாமரை. நான் எல்லாருக்கும் பரிமாறறேன்" என்றார்.

அவள் அடக்கமான பெண் போல அவர் சொன்னபடி அவனருகே சென்று அமர்ந்தாள்.

'இவளை யாரு இவ்ளோ கிட்ட உட்கார சொன்னா? கொஞ்சம் தள்ளி உட்காந்திருக்கலாம் இல்ல'

லேசாக அசைந்தாலே முட்டிகள் உரசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக அமர்ந்தவளை பார்த்து பல்லைக் கடித்தான் அவன். அவள் வயதுக்கு வந்த பிறகு இவ்வளவு நெருக்கமாக அவனருகே அமர்ந்ததில்லை. பெண் அவளே எந்தவித சங்கடமுமின்றி அமர அவன்தான் சங்கடத்தில் நெளிந்தான்.

அவனின் சங்கடம் புரிந்தாலும் தாமரை நகர்ந்து அமரவில்லை.

'ஆமா... பொண்ணுங்க வாசனையே படாத விசுவாமித்திரர் இவர். கண்டவ கூட படுக்கும் போது வராத சங்கடம் என் பக்கத்துல உட்காரும் போது வருதாமா?' என்று உள்ளுக்குள் நக்கலடித்தவள் விசாலாட்சி பரிமாறியதை சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளின் நெருக்கத்தில் அவன்தான் சாப்பிட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

பெயருக்கு சாப்பிட்டவன் சிறிது நேரத்தில் முதல் ஆளாக எழுந்து கொண்டான்.

"அடேய் இப்போ எதுக்காக எழுந்த? தாமரை சாப்பிட்டுக்கிட்டு இருக்கா இல்ல. அவ சாப்பிடற வரைக்கும் கூட உட்காரணும்னு கூடவா தெரியாது?" என்று கடிந்து கொண்டார் விசாலாட்சி.

"நம்ம வீடு தானேன்னு எழுந்துட்டேன் சின்னம்மா"

"நம்ம வீடா இருந்தா மட்டும்..."

அவர் பேச்சில் இடைபுகுந்த தாமரை "விடுங்க ஆயா... இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க" என்றாள்.

"சரிம்மா" என்றவர் அவனை முறைத்தபடி "அதான் அவளே சொல்லிட்டா இல்ல. போ" என்றார்.

விட்டால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு பின்பக்கம் சென்ற மாணிக்கம் கைகளை கழுவிவிட்டு பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

'எப்படி அவளால மட்டும் ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது? நேத்து நைட்டு வரைக்கும் அவனை தான் கட்டிக்க போறோம்ன்ற நினைப்புல இருந்தா. என்னென்னவோ நடந்து இன்னைக்கு நான் அவ கழுத்துல தாலி கட்ற மாதிரி ஆகிடுச்சு. இதுதான் விதின்னு அவ ஏத்துக்கிட்டதா இருந்தாலும் அதுக்குள்ள அவனை எப்படி மறக்க முடியும்? கொஞ்ச நாளாவது ஆகாதா?'

சிகரெட் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவனின் தோளில் தட்டிய ஏழுமலை "அடேய் இப்போ எதுக்காக வீட்டுலயே தம் அடிச்சிக்கிட்டு இருக்க? அங்க பாரு தாமரை உன்னை கண்ணாலேயே எரிச்சிக்கிட்டு இருக்கறதை" என்றதும் மாணிக்கம் திரும்பி பார்த்தான்.

அங்கே பின்கட்டு வாசலில் நின்றபடி தாமரை நிஜமாகவே அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்ததும் சட்டென்று கையில் இருந்த சிகரெட்டை தூர வீசினான் அவன். அடுத்த கணம் அவனை முறைத்தபடியே உள்ளே சென்றுவிட்டாள் அவள்.

"பொண்டாட்டி முறைச்சுப் பார்த்த அடுத்த செகண்ட் சிகரெட்டை தூக்கி போட்டுட்ட... பரவாயில்லடா... குடும்பம் நடத்தறதுக்கான எல்லா தகுதியும் உன்கிட்ட வந்துடுச்சு போல..." என்று கிண்டலடித்தான் ஏழுமலை.

"நீ வேற ஏன்டா... நான் சிகரெட் பிடிக்கிறது வீட்ல இருக்கவங்களுக்கு தெரிஞ்சாலும் வீட்ல அடிக்க மாட்டேன். இன்னைக்கு ஏதோ நினைப்புல இங்கேயே தம் அடிச்சிட்டேன். அதான் அவ பாத்ததும் தூக்கி போட்டேன்"

ஏழுமலை எதுவும் சொல்லாமல் உதட்டை மடித்து ஒரு மார்க்கமாக சிரித்தான். அவன் சிரிப்பே மாணிக்கம் சொன்னதை அவன் நம்பவில்லை என்றது.

அவன் தோளில் ஒரு அடிப்போட்ட மாணிக்கம் "இப்படியெல்லாம் சிரிச்ச இருக்க கடுப்புக்கு கொன்னே போட்டுடுவேன். வா உள்ள போகலாம்" என்றவன் ஏழுமலையுடன் உள்ளே சென்றான்.

அங்கே விசாலாட்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவனை பார்த்ததும் சாப்பிட்டபடியே "மாணிக்கம் சாப்பிட்டு முடிச்சதும் நானும் உன் சித்தப்பாவும் ஊருக்கு கிளம்பறோம்" என்றார்.

"இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம் இல்லையா சின்னம்மா?"

"நான் இங்க வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு மாணிக்கம். தாமரைக்கு ஒரு பெண் துணை இருந்தா நல்லதுன்னு நீ கேட்டுக்கிட்டதால தான் இவ்ளோ நாள் இங்கே இருந்தேன். இனி அதுக்கு அவசியமில்லையே. இனி நீங்க புருஷன், பொண்டாட்டி. நீங்க ஒன்னா இருந்தா யார் என்ன சொல்ல முடியும்?"

"அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நாள் கழிச்சாவது போயேன்" என்றவனை முறைத்தவர் "வயசாயிருக்கே தவிர உனக்கு கொஞ்சம் கூட புத்தியே இல்லடா. சின்னம்மா எதுக்காக சொல்றேன்னு கூட புரிஞ்சிக்க மாட்ற. இங்க இருக்கறதே இந்த ஒத்தை வராண்டா தான். நீங்க புதுசா கல்யாணமானவங்க. உங்களோட நான் எப்படி இங்க தங்க முடியும்?" என்றார்.

அவர் சொன்னதை கேட்டவன் திகைப்பூண்டை மிதித்தவன் போல திகைத்தான். அவன் பார்வை அவனையறியாமல் தாமரை மீது விழுந்தது.
 
அத்தியாயம் - 14 :

இரவு நேரம். சுற்றிலும் கரும் இருள் சூழ்ந்திருந்தது. தெருவில் இருந்த அனைத்து வீடுகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு கதவு சாத்தியிருந்தது.

தாமரை தன் வீட்டு வாசலில் அமர்ந்து தெருவையே வெறித்துக் கொண்டிருந்தாள். தெருவில் இருக்கும் வெறுமை போலவே அவள் மனதும் வெறுமையுடன் இருந்தது.

அவள் நினைத்தபடியே என்னென்னவோ செய்து இந்த திருமணத்தை நடத்தி இருந்தாலும் அதனால் அவளுக்கு சந்தோஷமா என்று கேட்டால் இல்லையென்றே பதில் சொல்வாள்.

மாணிக்கத்தை அவளுக்கு பிடிக்கும், தன் மாமனாக. ஆனால் ஒரு கணவனாக அனைத்து கெட்ட பழக்கங்களும் இருப்பவனை எந்த பெண்ணிற்கு தான் பிடிக்கும்? அவளும் அதற்கு விதிவிலக்கல்ல.

'இல்ல தாமரை... நீ இப்படி இருக்கக் கூடாது. இது நீயா செஞ்சிக்கிட்ட கல்யாணம். இதை நல்லபடியா மாத்திக்கிறது உன் கையில தான் இருக்கு' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.

'இந்த மாமனை என்ன இன்னும் காணோம்? நான் தனியா இருப்பேன்னு தெரிஞ்சும் இப்படி லேட்டா வருதே' என்று உள்ளுக்குள் பொருமியபடி தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலை ஆறு மணி பேருந்தில் விசாலாட்சியையும் அவர் கணவரையும் பஸ் ஏற்றிவிட்டு வருவதற்காக அவர்களுடன் சென்றவன் அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. வர ஒன்பது மணியாகும் என்று போன் மட்டுமே செய்தான்.

தாமரைக்கும் யாருமில்லா அந்த தனிமை தேவைப்படவே அவள் ஒன்றும் சொல்லவில்லை. இல்லையென்றால் அவனை வீட்டிற்கு வரவழைக்க அவளுக்கு தெரியாதா என்ன?

நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்ததில் கால் வலிப்பது போல உணர்ந்தவள் எழுந்து தெருவை பார்த்தபடியே குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தெருமுனையில் மாணிக்கத்தின் உருவம் தெரிந்தது. அவன் நடையின் தள்ளாட்டத்தை வைத்தே அவன் குடித்திருப்பதை புரிந்து கொண்டவள் கோபத்தில் பல்லை கடித்தாள். முன்பென்றால் அவனை எதிர்கொள்ளாமல் உள்ளே சென்று கதைவடைத்திருப்பாள். இப்போது அது முடியாதே?

'நல்ல நாள்லயே குடிக்காம தூங்காது. இன்னைக்கு இவ்ளோ நடந்திருக்கு. குடிக்காம இருக்குமா? ஆனா இதை இப்படியே விடக் கூடாது' என்று முடிவெடுத்தவள் அவன் அருகே வரக் காத்திருந்தாள்.

தள்ளாடியபடி வந்து திண்ணையில் அமர்ந்தவன் "தாமரை நீ எதுக்கு இந்த நேரத்துல வெளிய நிக்கிற? உள்ள போ…” என்று அந்த போதையிலும் சொன்னான்.

அவனுக்கு பதில் கொடுக்க அவள் உதடுகள் துடித்தாலும் இப்போது எது பேசினாலும் வீண் என்று புரிந்தவள் எதுவும் பேசாமல் உள்ளே செல்ல திரும்பினாள்.

"தாமரை ஒரு தலையணையும் போர்வையும் கொண்டு வா"

அவன் அப்படி கேட்டதை வைத்தே திண்ணையில் தூங்க முடிவெடுத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று பட்டென்று கதைவடைத்தாள்.

அவன் சாப்பிட்டானா என்றும் கேட்கவில்லை. அவன் கேட்ட தலையணையையும் போர்வையையும் கொடுக்கும் உத்தேசமும் இல்லை.

கதைவடைத்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் "அடியே தாமரை தலையணை கேட்டேனே மறந்துட்டியா?" என்று கத்தினான்.

அவன் கத்தியதும் கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி "இப்போ எதுக்காக கத்தற? குடிச்சா எதுவும் தெரியாது தானே... அப்புறம் தலையணை வச்சி தூங்கினா என்ன? வெறும் தரையில தூங்கினா என்ன? இனி குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா இதான் நிலைமை... அப்படியே தூங்கு. சத்தம் போட்ட வந்து சங்குலயே மிதிப்பேன் பாத்துக்கோ" என்று எரிந்து விழுந்தவள் மறுபடியும் கதைவடைத்தாள்.

அவள் அப்படி சொன்னதும் தள்ளாடியபடி எழுந்து கதவருகே வந்தவன் மூடிய கதவின் முன்பு நின்று "என்னது சங்குல மிதிப்பியா? அடியே... காலையில இருந்து நானும் பாக்கறேன். பேச்செல்லாம் ஓவரா இருக்கு. இப்படியே பேசிக்கிட்டே இரு. ஒருநாள் இல்ல ஒருநாள் உன் கன்னம் பழுக்க போகுது" என்று கத்தினான்.

உள்ளே இருந்தவளுக்கு அவன் சொன்னதெல்லாம் கேட்டாலும் அவனுக்கு பதிலும் சொல்லவில்லை. அவன் பேசியதை பொருட்படுத்தவும் இல்லை.

ஒரு தலையணையை எடுத்துப் போட்டு வெறும் தரையிலேயே படுத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

வெளியே அவன் இன்னும் கத்திக் கொண்டிருந்தான். ஆனாலும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.

சிறிது நேரம் கத்தியவன் அவள் வெளியே வரவில்லையென்றதும் வேறு வழியில்லாமல் திண்ணையில் சென்று படுத்துக் கொண்டான்.

அவன் சத்தம் அடங்கியதும் கண்ணீரை துடைத்துக் கொண்டு மெதுவாக எழுந்தவள் பூனை போல சத்தம் வராமல் கதவை திறந்து எட்டிப் பார்த்தாள். அவன் ஏதோ புலம்பியபடி படுத்திருந்தான்.

அதைப் பார்த்தவள் மீண்டும் சத்தமெழுப்பாமல் கதவை மூடிவிட்டு வந்து படுத்துக் கொண்டாள். களைப்பாக இருந்தாலும் தூக்கம் வரவில்லை. தன் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற நினைப்பே அவளை அச்சமூட்டியது.

எவ்வளவு நேரம் விழித்துக் கிடந்தாளோ? ஒரு கட்டத்தில் அவளை மீறி தூங்கிவிட்டாள்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளின் காதுகளில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. மெதுவாக கண் விழித்தவள் விடிவிளக்கின் வெளிச்சத்தில் கடிகாரத்தை பார்த்தாள். மணி மூன்று.

'இந்த நேரத்துல யார் கதவை தட்றாங்க?' என்று யோசித்தவளின் காதுகளில் வெளியே சலசலவென்ற சத்தத்துடன் "ஏய் தாமரை கதவை திற" என்ற மாணிக்கத்தின் குரலும் சேர்ந்து கேட்டது.

அந்த சத்தத்தில் இருந்து வெளியே மழை பெய்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டவள் வேகமாக சென்று கதவை திறந்ததும் முழுதாக நனைந்த நிலையில் சுவரோரமாக ஒண்டிக் கொண்டிருந்த மாணிக்கம் பார்வையில் விழுந்தான்.

அவளை பார்த்ததும் "சீக்கிரம் போய் தார்பாய் கொண்டு வா" என்றான்.

இரவு அவளை திட்டியதெல்லாம் அவன் நினைப்பில் இருப்பது போலவே தெரியவில்லை.

அடித்து பெய்து கொண்டிருந்த மழையையும், அதனால் நனைந்து விட்டிருந்த திண்ணையையும் ஒரு பார்வை பார்த்தவள் "இனி இங்க எப்படி படுக்க முடியும்? உள்ள வந்து படு" என்றாள்.

"அதெல்லாம் வேண்டாம். நீ போய் தார்பாய் கொண்டு வா"

அவனை முறைத்துப் பார்த்தவள் "இப்போ எதுக்கு இப்படி ஸீன் போட்டுட்டு இருக்க? நீ என் புருஷன் தானே... என்னோட வந்து படுக்கலாம் தப்பில்ல. ஒழுங்கா உள்ள வா..." என்றாள்.

அப்போதும் அவன் முரண்டு பிடித்தான்.

"இல்ல... நான் வரல"

"சரி... அப்போ தார்பாயும் கிடையாது. இப்படியே மழையில நனைஞ்சிகிட்டு இரு" என்றவள் கதவை அடைக்க செல்வது போல நடித்தாள்.

'ஐயையோ... நிஜமாவே மழையில நனைய விட்டுடுவா போல' என்று பயந்தவன் ஒரு கையால் கதவை பிடித்து அவளை மூட விடாமல் தடுத்தான்.

அவள் எதுவும் சொல்லாமல் அவனை பார்த்தாள்.

"இப்படியே நின்னுகிட்டு இருந்தா எப்படி உள்ள வர? தள்ளி நில்லு" என்றதும் அவள் ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டாள்.

அவன் உள்ளே வந்ததும் கதைவடைத்தவள் ஈரமான சட்டையை அவிழ்த்துக் கொண்டிருப்பவனை பார்த்து "இப்போ போதை தெளிஞ்சிடுச்சா?" என்று நக்கலாக கேட்டாள்.

அவளை சங்கடத்துடன் பார்த்தவன் மெதுவாக தலையசைத்தான்.

"என்ன இப்போ எதுக்கு கேட்கறேன்னு பாத்தியா? எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றதும் "சொல்லு தாமரை" என்றான்.

"இங்க பாரு இதுக்கு முன்ன எப்படி வேணும்னா இருந்திருக்கலாம் நீ... ஆனா இனியும் அப்படியே இருந்துடலாம்னு நினைக்காத. நீ இப்படி குடிச்சிகிட்டு. சிகரெட் பிடிச்சிக்கிட்டு இருக்கறதை எல்லாம் என்னால சகிச்சிக்க முடியாது. ஏற்கனவே உனக்கும் எனக்கும் பதினாறு வயசு வித்தியாசம். இதுல நீ இப்படி தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறதுன்னு இருந்தன்னா சீக்கிரமே மேல போய் சேர்ந்துடுவ"

அவள் சொன்னதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவன் "அடியேய் என்னடி பேசற?" என்றான்.

"உண்மையை பேசறேன். என் அப்பன் குடிச்சிட்டு லாரியில அடிப்பட்டு செத்தப்போ என் அம்மாவுக்கு அடைக்கலம் கொடுக்க நீயும் ஆயாவும் இருந்தீங்க. ஆனா எனக்கு அப்படி யாரும் இல்ல"

அதை சொல்லும் போதே அவள் குரல் கமறியது.

"அதை மனசுல வச்சிக்கிட்டு இனி ஒழுங்கா இருக்க பாரு"

அவள் வேதனையை உணர்ந்தவன் "சரி... இனி நான் குடிக்கிறதை குறைச்சிக்கிறேன்" என்றான்.

"எது குறைச்சிக்கிறியா? இனி நீ குடிக்கவோ, தம் அடிக்கவோ கூடாது. அப்படி நான் சொன்னதை மீறி குடிச்ச, நானே உனக்கு சோத்துல விஷத்தை வச்சிடுவேன் பாத்துக்கோ" என்று மிரட்டினாள்.

தன் முன்பு பத்ரகாளி போல நிற்பவளை பார்த்து 'நிஜமாவே சோத்துல விஷத்தை வச்சிடுவாளோ?' என்று ஒருகணம் பயந்தவன் "உடனே எப்படி ஒட்டுமொத்தமா விட முடியும் தாமரை? நான் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கிறேனே?" என்றான்.

"ஏன் சபரி மலைக்கு மாலை போடும் போது மட்டும் உன்னால தண்ணி அடிக்காம, தம் அடிக்காம இருக்க முடியுதில்ல?"

"அது சாமி விஷயம், அதான்..." என்று இழுத்தான் அவன்.

"அப்போ முடியுதுன்னா இப்போவும் முடியணும். நான் சொல்றதை சொல்லிட்டேன். உன் உசுரு உனக்கு முக்கியம்னா ஒழுங்கா இரு. இல்லனா உன் இஷ்டம் போல நடந்துக்கோ"

மீண்டும் மிரட்டியவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் இடத்தில் சென்று அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்துக் கொண்டாள்.

அவன் உடையை மாற்ற வேண்டும் என்பதை கூட மறந்துவிட்டு அவளையே முறைத்துக் கொண்டிருந்தான்.

"என்ன அப்புறம் முறைச்சிக்கலாம்... முதல்ல ட்ரெஸ்ஸை மாத்து. இல்லனா உனக்கு காய்ச்சல் வந்துடும்"

திரும்பி பார்க்காமல் படுத்தபடியே சொன்னாள்.

அவளை முறைத்தபடியே அலமாரியில் இருந்த லுங்கியை எடுத்தவன் அதை மாற்றியபடி 'முதல்ல எல்லாம் பேசவே மாட்டா... ஆனா காலையில இருந்து அதிகாரம் தூள் பறக்குது. அரை காப்படி சைஸ்ல இருந்துகிட்டு என்னமா மிரட்டறா... இவ எனக்கு சோத்துல விஷத்தை வைப்பாளாமா? என்னோட ஒரு அடிக்கு தாங்குவாளா இவ?' என்று முணுமுணுத்தான்.

அவன் சொன்னது அவள் காதில் விழுந்துவிட்டது.

சட்டென்று அவன்புறமாக திரும்பி படுத்தவள் "உன் ஒரு அடிக்கு தாங்க மாட்டேன்தான். மேல போய் சேந்துடுவேன். நானும் இல்லைனா இந்த உலகத்துல நீ அநாதையா தான் திரியணும். அதை மனசுல வச்சிக்கிட்டு என்ன வேணுமானாலும் பண்ணு" என்றாள்.

அவள் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாதவன் "உன் வாயில இருக்கறது நாக்கா? இல்ல தேள் கொடுக்காடி? இப்படி வார்த்தையாலேயே கொட்ற" என்றான்.

"அது நாக்கா இருக்கணுமா? இல்ல தேள் கொடுக்கா இருக்கணுமான்றது உன் கையில தான் இருக்கு. நீ ஒழுங்கா இருந்தா நானும் அமைதியா இருப்பேன். இல்லனா இப்படி தான் கொட்டு வாங்கிக்கிட்டே இருக்கணும். நீ என்ன பண்ணாலும் ஒரு ஓரமா உட்காந்து அழுதுகிட்டு இருக்க நான் உன் அம்மாவோ, அக்காவோ இல்ல"

"முன்ன கூட நான் இப்படித்தானே இருந்தேன். அப்போ மட்டும் அமைதியா இருந்த?"

"அப்போ நீ எனக்கு மாமா மட்டும் தான். இப்போ அப்படியா?" என்றதும் அவன் வாயை மூடிக்கொண்டான்.

"புரியுது இல்ல. அதனால நான் சொல்ற பேச்சை கேட்டுக்கிட்டு ஒழுங்கா இரு. இப்போ தூங்கு" என்றவள் மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவளை முறைத்தபடியே அவனும் உடை மாற்றிவிட்டு ஒரு ஓரமாக படுத்துக் கொண்டான்.
 
அத்தியாயம் - 15 :

ஜல் ஜல்லென்று கேட்ட கொலுசு சத்தத்தில் மெதுவாக கண்விழித்த மாணிக்கத்தின் கண்களில் மரகதம், செல்வியின் போட்டோக்களுக்கு செம்பருத்தி பூவை வைத்துக் கொண்டிருந்த தாமரை விழுந்தாள்.

தன்னை விட ஒரு அடி உயரமாக இருந்த போட்டோவிற்கு எக்கி பூவை வைக்கும் போது அவள் இடுப்பில் இருந்த சேலை நழுவி சற்றே கீழிறங்கி பளீரென்று சற்றே சதைப்பிடிப்புடன் இருந்த அவளின் இடுப்பு தெரிந்தது.

அதை பார்த்ததும் எச்சில் விழுங்கிய மாணிக்கம் வேகமாக முகத்தை திருப்பினான்.

'வேணாம்டா மாணிக்கம்... அவளை இப்படி பாக்காத... அது தப்பு' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் அந்த பக்கமே திரும்பக் கூடாதென்று முடிவெடுத்தான்.

ஆனால் ஒரு நிமிடம் கூட அவன் முடிவு நிலைக்கவில்லை. ஓரக்கண்ணால் சேலை மறைக்காத அவளின் இடுப்பையும், அதற்குமேல் தெரிந்தும் தெரியாமலும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த அவளின் முன்னழகையும் ரசிக்க ஆரம்பித்தான்.

அதேநேரம் பூவை வைத்துவிட்டு திரும்பிய தாமரை எழுந்து அமர்ந்திருந்தவனை பார்த்தவள் அவன் திருட்டுத்தனம் புரியாமல் "என்ன அதுக்குள்ள எழுந்துட்ட? எப்பவும் எட்டு மணிக்கு தானே ஐயா எழுந்திருப்பீங்க?" என்று இயல்பாக கேட்டாள்.

அவள் சாதாரணமாக தன்னிடம் பேசுவதை பார்த்த மாணிக்கம் சற்றுமுன் தான் செய்த செயலை நினைத்து வெட்கினான்.

ஆனால் அதை மறைத்துக்கொண்டு "கொலுசை போட்டுக்கிட்டு இப்படி ஜல் ஜல்ன்னு சத்தத்தை எழுப்பினா மனுஷன் எங்கேயிருந்து தூங்க? அதான் எழுந்துட்டேன்" என்று எரிந்து விழுந்தான்.

"நீ தூங்கணும்ன்றதுக்காக எல்லாம் என்னால கொலுசை கழட்டி வச்சிட்டு நடக்க முடியாது. என்ன எந்த பூச்சி, பொட்டும் கடிச்சிட கூடாதுன்ற அக்கறையில என் மாமன் வாங்கி கொடுத்த கொலுசு இது... " என்று நொடித்தாள்.

அவள் சொன்னதை கேட்டவனின் முகம் மென்மையாகியது. அவள் சொல்வது உண்மைதான். அவர்கள் வீட்டிற்கும் கழிப்பறைக்கும் நடுவே சற்று இடைவெளி உள்ளது. இரவு நேரங்களில் பின்பக்கம் பாம்பு, பூச்சி நடமாட்டம் இருக்கும். கொலுசு சத்தத்தை கேட்டால் அதெல்லாம் ஓடிவிடும். அதற்காக அவன்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் அவளுக்கு கொலுசு வாங்கி கொடுத்தான். வருடம் ஒருமுறை அதை மாற்றியும் கொடுத்து விடுவான்.

தன் மனஉணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் "ஆஹான்... உன் மாமன் பேச்சுக்கு அவ்ளோ மரியாதை கொடுக்கறவளா நீ? அதான் நைட்டு அந்த மிரட்டு மிரட்டுனியா?" என்றான்.

அவனை முறைத்துப் பார்த்தவள் "நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன் மிரட்டப் போறேன்? நான் உனக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைச்சா அதுக்கேத்தாப் போல நடந்துக்கோ..." என்றவள் பின்னர் "சரி... போய் குளிச்சிட்டு வா. அதுக்குள்ள காபி போட்டு வைக்கிறேன்" என்றாள்.

"இது என்னடி புதுசா இருக்கு? நான் எப்போ எழுந்ததும் குளிச்சிருக்கேன்?"

அவன் சொன்னதை கேட்டு தலையிலேயே அடித்துக் கொண்டவள் "நீ பேசறதை எவனாவது கேட்டான்... சிரிப்பான். நேத்து தான் நமக்கு கல்யாணமாச்சு. உனக்கு அது நியாபகமிருக்கா?" என்றதும் "அது நியாபகமிருக்க போய்த்தானே நீ ஆட்டி வைக்கிறபடி ஆடிக்கிட்டு இருக்கேன்" என்றான்.

"அது நினைப்பிருந்தா மட்டும் பத்தாது. அதுக்கேத்த போல நடந்துக்கணும்"

"நான் இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்னு இந்த காய்ச்சு காய்ச்சற?"

அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை.

"கல்யாணமான அடுத்த நாள் யாராவது லேட்டா குளிப்பாங்களா?" என்று பல்லை கடித்தபடி கேட்டாள் அவள்.

"அது அன்னைக்கே சாந்தி முகூர்த்தம் கொண்டாடறவங்களுக்குடி... எனக்கென்ன?"

"ஆமா... இதை ஊர் முழுக்க போய் சொல்லுவியா? அப்புறம் எல்லாரும் என்ன சொல்லுவாங்க... அவன் ஏற்கனவே சாந்தி முகூர்த்தத்தை முடிச்சிட்டான் போல... அதான் நேத்து நைட் அமைதியா தூங்கிட்டான் போலன்னு திரும்ப நம்மளை வாய்ல போட்டு மெல்லுவாங்க. இதெல்லாம் தேவையா நமக்கு?"

அவள் சொன்னதை கேட்டு வாயை பிளந்தவன் "ஏன்டி அப்படியெல்லாம் கூடவா பேசுவாங்க? இல்ல சும்மா சொல்றியா?" என்றான்.

"ஏன் நேத்து எப்படி பேசுனாங்கன்னு பாத்த இல்ல... அதுக்குப்பிறகுமா உனக்கு சந்தேகம்?"

"இந்த மக்க பேசினாலும் பேசும். எதுக்கும் நீ சொன்னபடி நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்" என்றபடி எழுந்தவன் இரவு கழற்றி போட்ட உடையை தேடினான்.

அவன் போட்ட இடத்தில் அந்த உடைகள் இல்லை.

"இன்னும் என்ன மசமசன்னு நின்னுகிட்டு இருக்க?" என்றதும் "இல்ல... நைட் நனைஞ்சு போன ட்ரெஸ்ஸை இங்கதான் கழட்டி போட்டேன். அதை துவைச்சு போட்டுட்டு குளிக்கலாம்னு பாத்தா அதை காணோம்" என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னான்.

"அதை நான் துவைச்சு காய வச்சிட்டேன். நீ போய் குளி" என்றதும் அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

"என்னது? நீ துவைச்சியா?"

"இப்போ எதுக்கு இவ்ளோ ஆச்சர்யப்படற? என் புருஷன் துணியை நான் துவைச்சேன். இதுல என்ன இருக்கு?" என்று அவள் சாதாரணம் போல சொன்னாள்.

இதுநாள் வரை தாமரை அவன் உடைகளை துவைத்ததில்லை. அவன் அம்மாவும் அக்காவும் உயிரோடு இருக்கும் வரை இருவரில் யாரேனும் ஒருவர் துவைப்பர். அவர்கள் இறந்த பிறகு அவனே துவைத்துக் கொள்வான். இப்போது அவள் துவைத்துவிட்டேன் என்றதும் ஆச்சர்யத்துடன் சந்தோஷமாகவும் இருந்தது.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அவள் அவனை கணவனாக ஏற்றுக் கொண்டுவிட்டாள் என்று தானே!

அவன் திகைப்புடன் நிற்பதை பார்த்தவள் "என்ன? இப்படி ஆணி அடிச்ச மாதிரி நின்னா என்ன அர்த்தம்? பாத்ரூம்ல சுடுதண்ணி இருக்கு. போய் குளிச்சிட்டு வா" என்றவள் பின்பக்கம் சென்று பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.

மாணிக்கம் கனவில் நடப்பவனை போல நடந்து சென்று குளித்துவிட்டு வந்தான்.

அவன் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது வெளியே இருந்து "மாணிக்கம்" என்று குரல் கேட்டது.

குரலை வைத்தே அது ஏழுமலை தான் என்பதை கண்டுகொண்டவன் "உள்ள வாடா" என்று குரல் கொடுத்தான்.

உள்ளே வந்தவன் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தவனை பார்த்து ஆச்சர்யத்தில் தன் கண்களை அகல விரித்தவன் "அடேய் நீதானா இது? என்ன காலையிலேயே குளிச்சு சுத்த பத்தமா இருக்க?" என்றான்.

"தாமரை தான்டா காலையிலேயே குளிக்க சொல்லுச்சு. சுடுதண்ணி எல்லாம் போட்டு கொடுத்துச்சு தெரியுமா? என்று பெருமையாக சொன்னான்.

கண்கள் மின்ன பேசியவனின் அருகே சென்றவன் "என்னடா காலையிலேயே சுடுதண்ணி குளியல் எல்லாம் போட்டிருக்க? அப்படின்னா நைட் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்று அவன் காதில் மெல்லமாக கேட்டான்.

தன் கையிலிருந்த துண்டால் ஒரு அடி போட்டவன் "நான் இப்போ சொன்னதை வச்சு அவளை அடக்க ஒடுக்கமான, அன்பான பொண்டாட்டின்னு நினைச்சிடாத. நைட் குடிச்சிட்டு வந்தேன்னு போர்வை, தலையணை கூட கொடுக்கல தெரியுமா? வெறும் தரையில படுத்துக் கிடந்தேன்" என்றான்.

"டேய் சும்மா சொல்லாத... நம்ம தாமரை அப்படியெல்லாம் பண்ற ஆளில்லை"

"நீ வேறடா... நைட் மழை பெய்யவும் போனா போகுதுன்னு உள்ள விட்டா... அதுமட்டுமில்ல இனி குடிச்சாலோ, தம் அடிச்சாலோ சோத்துல விஷத்தை வச்சிடுவேன்னு மிரட்டினா"
அவன் சொன்னதை கேட்ட ஏழுமலை பயத்தில் எச்சிலை விழுங்கினான்.

"நிஜமாவே தாமரை அப்படியெல்லாம் மிரட்டுச்சா?"

"உன்கிட்ட நான் ஏன்டா பொய் சொல்ல போறேன்?"

"நீ முதல்ல சொன்னதை கேட்டதும் நம்ம பொண்டாட்டியும் இருக்காளே... ஒருநாளாவது இந்த மாதிரியெல்லாம் நமக்கு சுடுதண்ணி வச்சி கொடுத்திருப்பாளான்னு ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் உன்மேல பொறாமைப்பட்டேன் டா... ஆனா இப்போ தாமரை மிரட்டினதை கேட்டதும் என் பொண்டாட்டி தெய்வம்னு தோணுதுடா. நானெல்லாம் குடிச்சிட்டு வீட்டுக்கு போனா திட்டுவாளே தவிர வேற எந்த விதத்துலயும் எனக்கு குறை வச்சதில்லை. எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மச்சான். இப்போ எல்லாம் பொண்ணுங்க புருஷனை போட்டுத் தள்ள தயங்கறதே இல்ல. அதனால தாமரை சொல்றபடி நடந்து உசுரை காப்பாத்திக்கோ மச்சான்"

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த தாமரை "வாங்க அண்ணா" என்று வரவேற்றவள் பின்னர் "எதை அண்ணா காப்பாத்திக்கணும்?" என்றாள்.

அவளை பார்த்ததும் திருதிருவென்று விழித்தான் ஏழுமலை. அவன் முழியை பார்த்தவளுக்கு சந்தேகம் வந்தது.

'இந்த அண்ணா எதுக்கு இப்படி முழிக்கிறாரு' என்று அவள் யோசிக்கும் போதே அவளை பார்த்து ஈயென்று இளித்தவன் "அதுவாம்மா... எப்படியோ கடவுள் புண்ணியத்துல உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்துடிச்சு. புத்தியோட பொழைச்சு உன் வாழ்க்கையை காப்பாத்திக்கோன்னு சொன்னேன்மா" என்றான்.

"ஓஹ்... உங்க ப்ரெண்டு கிட்ட நல்லா சொல்லுங்க... நேத்து தான் கல்யாணமாகியிருக்கு. வீட்ல நான் தனியா இருக்கேன். இது எதைப் பத்தியும் யோசிக்காம மூக்கு முட்ட குடிச்சிட்டு வராரு" என்று குறைப்பட்டாள்.

'நல்ல ஆளுகிட்ட எனக்கு புத்தி சொல்ல சொல்றா. குடிக்க எனக்கு கம்பெனி கொடுத்ததே அவன்தான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவா?' என்று கிண்டலாக நினைத்தான் அவன்.

"அப்படியாமா பண்ணான் இவன்? நீ கவலைப்படாதம்மா... நான் இவனுக்கு புத்தி சொல்றேன்" என்றவன் மாணிக்கத்திடம் "இங்க பாருடா நீ முன்ன மாதிரி தனிக்கட்டை இல்ல... இப்போ குடும்பஸ்தன் ஆகிட்ட... அதனால இந்த குடியை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா என் தங்கச்சி கூட குடும்பம் நடத்தற வழியை பாரு" என்று அட்வைஸ் செய்தான்.

மாணிக்கம் அவனை பார்த்து நக்கலாக சிரித்தான்.

"டேய் உன் பொண்டாட்டி முன்னாடி என் மானத்தை வாங்கிடாதடா" என்று மெல்லிய குரலில் கெஞ்சினான் மாணிக்கம்.

"நீ மட்டும் உன் பொண்டாட்டி கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லி வச்சிருக்கியே... நான் சொல்ல கூடாதா?"

அவனும் அதே குரலில் பேசினான்.

"உனக்கு சொல்லணும்னா நான் போன பிறகு கூட சொல்லிக்கோடா... இப்போ மட்டும் வேண்டாம்"

அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவனை குழப்பத்துடன் பார்த்த தாமரை "ரெண்டு பேரும் என்ன குசுகுசுன்னு பேசிக்கிறீங்க?" என்றாள்.

"பேசிக்கிறோமா? இல்லயே நல்லா கெட்ட கெட்ட வார்த்தையில அவனை திட்டிக்கிட்டு இருக்கேன்ம்மா. அது உன் காதுல விழுந்துடக் கூடாதேன்னு தான் மெல்லமா திட்றேன்" என்று சொல்லிவிட்டு ஈயென்று இளித்தான்.

அவன் சொன்னதை நம்பலாமா? வேண்டாமா? என்று தாமரைக்கு தெரியவில்லை. அவள் இருவரையும் சந்தேகத்துடன் பார்த்தாள்.

"அடியே என்னை ஒழுங்கா இருன்னு சொன்னா மட்டும் பத்தாது. நீயும் ஒழுங்கா இருக்கணும். என் ப்ரெண்ட் வீட்டுக்கு வந்து எவ்ளோ நேரம் ஆகுது. இதுவரைக்கும் ஒருவாய் தண்ணி கூட கொடுக்கல நீ. இதைத்தான் என் அம்மாவும் உன் அம்மாவும் உனக்கு சொல்லி கொடுத்தாங்களா? போ... போய் அவனுக்கு காபி போட்டு கொண்டு வா" என்று அதட்டினான் மாணிக்கம்.

அவன் அதட்டியதும் தான் அவளுக்கு தான் செய்த தவறு புரிந்தது.

"என்னை மன்னிச்சுடு மாமா... அண்ணனுக்கு காபியா? டீயான்னு கேட்க தான் வந்தேன். பேச்சு வாக்குல அதை மறந்துட்டேன்" என்றவள் ஏழுமலையிடம் "அண்ணா உங்களுக்கு காபியா? டீயா?" என்றாள்.

"அவன் கழனித் தண்ணிய கொடுத்தா கூட குடிப்பான். போய் எதையாவது போட்டு கொண்டு வா" என்றதும் ஏழுமலை அவனை முறைத்தானென்றால் தாமரை பின்கட்டிற்கு சென்றாள்.

"இப்படியாடா உன் பொண்டாட்டி கிட்ட என்னை அசிங்கப்படுத்துவ?" என்று பொறுமியவனின் தோளில் கைபோட்டவன் "உன் பொண்டாட்டி கிட்ட நீ என்னை அசிங்கப்படுத்தினதை விட இது பெருசுல்ல... வா வெளிய போய் பேசலாம்" என்றபடி அவனை இழுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றான்.
 
அத்தியாயம் - 16 :

மாணிக்கம் ஏழுமலையுடன் வாசலுக்கு வரும் போது தன் வீட்டு வாசலில் இருந்த செம்பருத்தி செடியில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்த கலா அவர்களை பார்த்ததும் முகத்தை திருப்பினார்.

அதை கவனித்த மாணிக்கத்தின் முகம் மாறியது.

"இப்போ எதுக்குடா இந்த அக்கா கழுத்தை இந்த திருப்பு திருப்புது?" என்று ஏழுமலை விளையாட்டாக கேட்டான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் "ஒரு நிமிஷம்டா" என்ற மாணிக்கம் கலாவை நோக்கி சென்றான்.

அவன் வருவதை ஓரக்கண்ணால் கவனித்தாலும் கலா கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகே வந்தவன் "அக்கா" என்றான்.

அவர் காது கேளாதவர் போல பூக்களையே பறித்துக் கொண்டிருந்தார்.

"அக்கா ஒரு நிமிஷம் என்னை பாத்தீங்கன்னா நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போய்டுவேன்" என்றதும் அவர் கைகள் பூக்களை பறிப்பதை நிறுத்தியது.

ஆனாலும் அவர் அவன் பக்கம் திரும்பவில்லை.

அதையே அவரின் சம்மதமாக எண்ணி "அக்கா அன்னைக்கு நைட் நீங்க பாத்தது உண்மைதான். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள எதுவும் இல்ல. அன்னைக்கு தன்னை பாம்பு கடிச்சிட்டதா நினைச்சு எங்க செத்து போய்டுவோமோன்னு பயந்து போய் தாமரை என்னை வந்து கட்டிக்கிட்டா. உயிர் பயத்துல இருக்கறவளை நான் அணைச்சு ஆறுதல்படுத்தினேன். அதை பாத்துட்டு தான் நீங்க தப்பா நினைச்சிடீங்க..."

"இப்போவும் நீங்க அதே நினைப்புல இருக்கீங்கன்னு தான் தோணுது. மத்தவங்க எங்களை பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்ல. ஆனா நீங்க அப்படி நினைக்க கூடாது. ஏன்னா நான் ஊர்ல இல்லாத சமயத்துல நீங்களும் உங்க புருஷனும் தான் என் குடும்பத்துக்கு உதவியா இருந்திருக்கீங்க. அம்மாவும் அக்காவும் செத்த சமயத்துல கூட கூடவே நின்னு எல்லாம் பண்ணீங்க. உங்களை மாதிரி அருமையான மனுஷங்களோட உறவு ஒரு தப்பான எண்ணத்தால அறுந்து போறதுல எனக்கு உடன்பாடில்ல... அதான் நீங்க முகத்தை திருப்பினாலும் நான் உங்ககிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேன்" என்றான்.

மாணிக்கம் தன்மையாகவே பேசினான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டதும் கலாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

அவனை குற்ற உணர்வுடன் பார்த்தவர் "என்னை மன்னிச்சுடு மாணிக்கம். உண்மை என்னனு தெரியாம கண்ணால பாத்ததை மட்டும் வச்சு நேத்து அப்படி பேசிட்டேன்" என்றார்.

"பரவாயில்ல அக்கா... உங்க இடத்துல யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பாங்க. இப்போ கூட நான் ஏன் உங்ககிட்ட நடந்ததை சொன்னேன்னா நீங்க இப்போ என்னை பாத்ததும் முகத்தை திரும்பின மாதிரி தாமரை கிட்டயும் நடந்துக்கிட்டிங்கன்னா அவ பீல் பண்ணுவா... சின்ன வயசுல இருந்து அவ எங்க வீட்டுல பாதி நேரம் இருந்தான்னா மீதி நேரம் உங்க வீட்டுல தான் இருப்பா. அவகிட்ட நீங்க முகம் காட்டினா அவளால தாங்கிக்க முடியாது. ஏற்கனவே அம்மா இல்லாம, நடக்க இருந்த கல்யாணமும் நின்னு, என்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கை காத்துல பறக்கற பட்டம் மாதிரி காத்தடிக்கிற திசை பக்கமெல்லாம் போயிடிச்சு. இனியாவது அவ சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். அதான் உங்ககிட்ட நடந்ததை சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்"

தன் உதட்டை கடித்தபடி சங்கடத்துடன் அவனை பார்த்தவர் "இல்லப்பா... இனி நான் உங்ககிட்ட முகம் திருப்ப மாட்டேன். நீயே சொன்ன மாதிரி தாமரை இங்க வளர்ந்த புள்ள... அம்மா இல்லைன்னதும் அவ தடம் மாறி போய்ட்டாளோன்னு எனக்கு ஆதங்கம். அதான் அப்படி பேசிட்டேன். உங்க ரெண்டு பேரை பத்தி தெரிஞ்ச நானே அப்படி நினைச்சிருக்க கூடாது" என்றார்.

"சரி விடுங்கக்கா... நடந்தது நடந்து போச்சு. இப்போ உங்களுக்கு உண்மை என்னனு புரிஞ்சிடுச்சில்ல. அதுவே எனக்கு போதும்" என்று பெருந்தன்மையாக சொன்னவன் "என் ப்ரெண்ட் ரொம்ப நேரமா எனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கான். நான் கிளம்பறேன்க்கா" என்றான்.

அவனை பார்த்து தலையசைத்தவர் "இந்த அக்கா உங்களை தப்பா நினைச்சிட்டேன்னு உனக்கொன்னும் என்மேல கோபமில்லையே மாணிக்கம்" என்றார்.

"அதெல்லாம் எதுவுமில்லக்கா. நான் வரேன்" என்றவன் மீண்டும் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் சென்றதும் அதுநேரம் வரை கலாவின் பக்கத்துக்கு வீட்டில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிழவி அவளருகே வந்து "இப்போ எதுக்காக அந்த பய இங்க வந்துட்டு போறான்?" என்று ஆர்வமாக கேட்டார்.

மாணிக்கம், தாமரையின் கல்யாண கதை நேற்றே ஊர் முழுக்க பரவிவிட்டது. இப்போது அவன் வந்து கலாவிடம் பேசிச் சென்றதை பார்த்த அந்த கிழவிக்கு அது பற்றி தெரிந்து கொள்ளவில்லையென்றால் தலை வெடித்துவிடும்.

"அது ஒண்ணுமில்ல பெரியம்மா" என்றவர் அவன் சொன்னதையெல்லாம் சொல்லி "பாவம் ரெண்டும் நல்ல பசங்க. நான்தான் அவங்களை தப்பா நினைச்சிட்டேன்" என்று அவரிடம் வருத்தப்பட்டார்.

"அப்படியா சொன்னான் அவன்... ஆனா ஊருக்குள்ள வேற மாதிரி பேசிக்கிறாங்க"

"ஊர்ல இருக்கவனுக்கு என்ன வேலை? ஒரு சின்ன விஷயம் நடந்தா போதும். அதுக்கு கண்ணு, காது, மூக்குன்னு எல்லாம் வச்சு ஒரு உருவமாக்கி உலவ விடுவாங்க" என்றவர் "சரி பெரியம்மா எனக்கு உள்ள வேலை கிடக்கு. நான் போறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அவர் சென்றதும் அந்த கிழவி தன் வீட்டிற்கு செல்லாமல் நேராக எதிர்வீட்டிற்கு சென்றது.

மறுபுறம் அங்கு நடந்ததை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏழுமலை "என்னடா டமாரம் கலா அக்காகிட்ட பேசின கையோட எதிர்வீட்டுக்கு போகுது?" என்றான்.

"எப்படியும் நான் சொன்னதை கலா அக்கா அதுகிட்ட சொல்லியிருக்கும். அதை ஊர் முழுக்க ஒலிப்பரப்பினா தான் அந்த கிழவிக்கு காலைல சோறே தொண்டையில இறங்கும்" என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

"அதென்னவோ உண்மைதான்" என்ற ஏழுமலை பின்னர் வேறு பேச்சிற்கு தாவினான்.

"சரிடா இனி என்ன பண்ணலாம்னு இருக்க?"

"நீ என்ன கேக்கறேன்னு புரியல"

"தாமரை கல்யாணம் முடிஞ்சதும் மெட்ராஸ் வந்துடுவேன்னு சொன்ன... இப்போ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகிடிச்சு. தாமரைக்கு வேலை இங்க இருக்கு. அப்படியிருக்கும் போது உன்னால அங்க எப்படி வர முடியும்? பேசாம அங்க இருக்க வீட்டை காலி பண்ணிடறியா?

"நான் இன்னும் அது பத்தி யோசிக்கவே இல்லடா" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையில் டீ கிளாஸுடன் வந்த தாமரை அதை ஏழுமலையிடம் கொடுத்தபடி "அவருக்கு அதெல்லாம் யோசிக்க எங்கண்ணா நேரமிருக்கு? எங்க குடிக்கலாம்? எவ்ளோ குடிக்கலாம்? அதை பத்தின யோசனை மட்டும் தான் இருக்கு" என்று குத்திக் காட்டினாள்.

மாணிக்கத்தை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தபடி கிளாஸை வாங்கினான் ஏழுமலை.

"ஏய் இப்போ எதுக்காக அந்த பேச்சு? சும்மா சும்மா அதையே சொல்லிக் காட்ற?" என்று அதட்டினான் மாணிக்கம்.

"நீ பண்ணாததையா சொன்னாங்க? பண்ணதை தானே சொன்னேன். நான் சொல்லிக் காட்ட கூடாதுன்னா நீ பண்ணாத"

அவர்கள் சண்டையை பார்த்த ஏழுமலை "போதும். ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க" என்றான்.

"நீங்க சொல்றிங்கன்னு அமைதியா போறேன் அண்ணா" என்றவள் மாணிக்கத்தை பார்த்து கழுத்தை முறுக்கிவிட்டு சென்றாள்.

அவள் சென்றதும் "தாமரையாடா இது... இந்த போடு போடுது. முன்ன எல்லாம் உன்கிட்ட ஒரு வார்த்தை பேசவே யோசிக்கும். இப்போ வாயை திறந்தா பட்டாசா பொரியுது" என்று ஆச்சரியப்பட்டான்.

"நான்தான் சொன்னேன்ல... நேத்துல இருந்தே இப்படித்தான். ஒரு வார்த்தைக்கு நூறு வார்த்தை திருப்பி கொடுக்கற"

"அது ஒண்ணுமில்லடா... எல்லாம் நீ அவ கழுத்துல கட்டின தாலி பண்ற வேலை. பொண்டாட்டின்னு ஆயாச்சுன்னா ஊமைக்கு கூட பேச்சு வந்துடும்" என்று கிண்டலடித்தவன் பின்னர் "சரி... அதை விடு... நான் சொன்னதை பத்தி என்ன நினைக்கிற?" என்றான்.

யோசனையுடன் திண்ணையில் அமர்ந்தவன் "அங்கனா எனக்கு தினமும் வேலை கிடைக்கும். இங்க எப்போவாவது தானே கிடைக்கும்" என்றான்.

"அதுவும் சரிதான். ஆனா என்ன பண்ணணுமோ அதை சீக்கிரம் பண்ணு... அங்க உன் வீட்டு ஹவுஸ் ஓனர் என்னை பாக்குபோதெல்லாம் கேள்வி கேட்டு சாகடிக்குது"

"ஏன் அவங்களுக்கென்ன? எதுக்காக அவங்க உன்னை கேள்வி கேட்கறாங்க?"

"எதுக்கா? நீ பாட்டுக்கு இங்க வந்து உட்காந்துட்ட... ரெண்டு மாசமா வாடகையும் கொடுக்கல. நீ இருப்பியா? காலி பண்ணிடுவியான்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கு உன் ஹவுஸ் ஓனர்"

"ஐஞ்சு மாச வாடகை அட்வான்சா கொடுத்திருக்கேன் தானே அப்புறம் என்ன அவங்களுக்கு?"

"அது இருக்கறதால தான் உன் பெட்டி, படுக்கை எல்லாம் இன்னும் வீட்டுக்குள்ள இருக்கு. இல்லனா இந்நேரம் நடுரோட்டுக்கு வந்திருக்கும்" என்று கிண்டலடித்தான்.

"செஞ்சாலும் செய்யும். அது அப்பேற்பட்ட ஆளுதான்" என்றவன் ஏழுமலை சொன்னதை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

எவ்வளவு யோசித்தாலும் இங்கே அவனுக்கு சரியாக வேலை கிடைக்குமென்று தோன்றவில்லை.

"எனக்கென்னவோ இன்னும் கொஞ்ச நாள் மெட்ராஸ்ல இருக்கலாம்னு தோணுதுடா... நீ என்ன சொல்ற?" என்று ஏழுமலையிடம் அபிப்ராயம் கேட்டான் மாணிக்கம்.

"நீ இதைப்பத்தி என்கிட்ட கேட்கறதை விட்டுட்டு தாமரை கிட்ட பேசு. ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்றவன் டீ கிளாஸை மாணிக்கத்தின் கையில் கொடுத்துவிட்டு "சரி, நான் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்" என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சிறிது நேரம் அதுபற்றி யோசித்த மாணிக்கம் பின்னர் எழுந்து பின்கட்டிற்கு சென்றான். அங்கே தாமரை கையில் இரும்பால் செய்த ஊதுகுழலை வைத்து அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்த மாணிக்கம் "ஏய் கேஸ் ஸ்டவ் தான் இருக்குல்ல. அதுல சமைக்கிறதை விட்டுட்டு எதுக்கு அடுப்புல சமைச்சிக்கிட்டு இருக்க?" என்று அதட்டினான்.

அடுப்பின் புகை கண்ணில் அடித்ததால் லேசாக கண்ணை கசக்கியபடி திரும்பியவள் "சோறு மட்டும் எப்போவும் அடுப்புல தான் வடிப்போம் மாமா. குழம்பு கேஸ் அடுப்புல தான் வைப்பேன்" என்றாள்.

"ஏன் அதையும் அதுலையே வச்சா என்ன?"

"கேஸ் சீக்கிரம் காலியாகிடும்ல. அதான் சோத்தை அடுப்புல வடிச்சிட்டு குழம்பை அதுல வைப்போம். எப்போவும் நம்ம வீட்ல இப்படித் தான் சமைப்போம். தெரியாதா உனக்கு?"

அவனுக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. அவன் வீட்டிற்குள்ளேயோ பின்கட்டிற்கோ பெரிதாக வரமாட்டான்.

"ஓஹ்... சரி இனி எல்லாத்தையும் கேஸ்லயே சமைச்சிடு. இப்படி அடுப்பை ஊதி கஷ்டப்படாத" என்று பரிவுடன் சொன்னவனை பார்த்து புன்னகைத்தவள் சரியென்று தலையசைத்தாள்.

"சரி வேலை முடிஞ்சிடுச்சா? முடிஞ்சிட்டா சொல்லு. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றதும் "ஒரு பத்து நிமிஷம் ஆகும். வேணும்னா இங்கேயே உட்காந்து சொல்லேன்" என்றவள் அருகே இருந்த மரக்கட்டையை தூக்கி அவன் அமர போட்டாள்.

அதில் அமர்ந்தவன் எந்தவித முஸ்தீபும் இன்றி நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"தாமரை நான் முன்ன மாதிரி மெட்ராஸ்ல தங்கி வேலைக்கு போகலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?" என்றான்.

அவன் சொன்னதை கேட்டவளின் முகம் மாறியது.

அவனை முறைத்துப் பார்த்தவள் "மெட்ராஸுக்கு போறேன்னு சொல்றது வேலைக்கு போகவா? இல்ல அந்த சீமை சித்ராங்கி கூட கூத்தடிக்கவா?" என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்றவன் அவளை அடிக்கக் கை ஓங்கினான்.
 
அத்தியாயம் - 17 :

கோபத்தில் கை ஓங்கியவன் அவளை அடிக்க முடியாமல் அருகே இருந்த சுவரில் குத்தினான்.

அவன் கோபத்தை கண்டும் சிறிதும் அஞ்சவில்லை தாமரை.

"இப்போ எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம் வருது? நேத்து காலையில என் கழுத்துல தாலி கட்றதுக்கு முன்னாடி வரை அந்த நினைப்புல தானே இருந்த... ஒரு நாளைக்குள்ள உனக்கு ஞானோதயம் வர நீ புத்தனும் இல்ல... இங்க எந்த போதிமரமும் இல்ல" என்று நக்கலாக சொன்னாள்.

அவளை முறைத்துப் பார்த்தவன் "என்ன பத்தி இவ்ளோ கேவலமான அபிப்ராயம் இருக்கவ எதுக்குடி எனக்கு கழுத்தை நீட்டின?" என்றான்.

"நான் ஒன்னும் ஆசைப்பட்டு உன்னை கட்டிக்கில. குடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறது. பொண்ணுங்களோட சகவாசம் இப்படி வேண்டாத பழக்கம் எல்லாம் இருக்க உன்னை கட்டிக்க யார் முன்வருவா? ஆனா என் தலையெழுத்து உனக்கு கழுத்தை நீட்டும்படி ஆகிடுச்சு. அதுக்காக நீ அடிக்கிற கூத்தை எல்லாம் பொறுத்துக்க நான் ஒன்னும் அந்த காலத்து நளாயினியோ, சாவித்ரியோ இல்ல. இதுக்கு மேல வேறொரு பொண்ணு மேல உன் கண் பார்வை விழுந்தா கூட கண்ணை நோண்டிடுவேன்" என்றபடி கையிலிருந்த ஊதுகுழலை அவன் முன்பு குத்துவது போல கொண்டு வந்தாள்.

அவள் செய்கையில் பயந்து ஒரு அடி பின்வாங்கியவன் "அடியேய் நீ நினைக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்லடி... இனி என் வாழ்க்கையில கல்யாணமே இல்லைனு முடிவுக்கு வந்த பின்னாடி தான் நான் பாதை மாறி போனேன்" என்றான்.

அவள் பேசியதில் அவனுக்கு கோபம் வந்தாலும் அவளிடத்தில் இருந்து யோசிக்கும் போது அவள் பேசியது சரியே என்று தோன்றியது. அவளுக்கு அவன் மீது நம்பிக்கை வரும் அளவிற்கு அவன் நடத்தை இல்லையே. அதனாலேயே அவன் தன்னை விளக்கினான்.

"கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணா கண்டவ கூட கூத்தடிக்கலாமா?"

"இங்க பாரு தாமரை... நீ சின்ன பொண்ணு... உனக்கு இதெல்லாம் புரியாது" என்று சங்கடத்துடன் சொன்னான் அவன்.

"என்ன புரியாது? இதெல்லாம் புரியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல. உன் உடம்பை கட்டுப்பாட்டுக்குள்ள வைக்க முடியாம தினவெடுத்து போய் கண்டவ கூட படுத்திருக்கியே... நீயாச்சும் தாம்பத்தியம்னா என்னனு கேள்வித்தான் பட்டிருப்ப... ஆனா உன் அக்கா, அதான் என் அம்மா அவங்க புருஷன் கூட ரெண்டு வருஷம் வாழ்ந்திருக்கா... அவங்க தாலியறுத்துட்டு இங்க திரும்பி வரும் போது இருபது வயசு இருக்குமா? ரெண்டு வருஷம் அந்த சுகத்தை அனுபவிச்சிட்டு அதுக்கு பிறகு அது இல்லைனு ஆன பிறகு அவங்க என்ன உன்ன மாதிரி ஊரா மேஞ்சாங்க... தன்னோட எல்லா ஆசையையும் கொன்னு புதைச்சிட்டு பொண்ணுங்காக, குடும்பத்துக்காகன்னு தானே வாழ்ந்தாங்க. அவங்களும் மனுஷி தானே... அவங்களுக்கும் உன்னை மாதிரியே உடல் தேவை இருந்திருக்கும் தானே..."

தாமரையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதில் ஈட்டியாய் இறங்கியது.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவன் அமைதியாக இருந்தான்.

"இங்க பாரு... இவ்ளோ நாள் நீ எப்படி வேணா இருந்திருக்கலாம். ஆனா இனி நான் இந்த உலகத்துல இருக்க வரைக்கும் நீ தாமரையோட புருஷனா மட்டும் தான் இருக்கணும். ஒருவேளை என் அம்மா மாதிரி, உன் அம்மா மாதிரி நான் அல்பாயுசுல போய்ட்டா..."

அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தன் கையால் அவள் வாயடைத்தவன் "இந்த மாதிரி பேசாதன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்டி... இனி ஒரு பேச்சுக்காக கூட நீ சாவை பத்தி பேசக் கூடாது. அப்படி பேசின நானே உன்னை சாகடிச்சிடுவேன்" என்று கோபமாக சொன்னவன் அடுத்த கணம் எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் 'கோபம் வந்தா என்ன பேசறோம்னு புரியாம இப்படியாடி பேசி வைப்ப... பாவம் மாமா... அன்னைக்கே ரொம்ப பீல் பண்ணுச்சு. அது தெரிஞ்சும் இன்னைக்கும் இப்படி பேசி வச்சிருக்கியே' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தாள்.

அவன் நெற்றி மீது கை வைத்தபடி கண்ணை மூடி படுத்திருந்தான். பெருமூச்சை வெளியேற்றியவள் சோற்று பாத்திரத்தை எடுத்து வடித்துவிட்டு உள்ளே சென்று அவனருகே அமர்ந்தாள்.

அவள் வந்தது தெரிந்தாலும் அவன் கண்ணை திறக்கவில்லை.

"என்னை மன்னிச்சுடு மாமா... இனி இப்படி பேச மாட்டேன்"

அவன் அப்போதும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தான்.

"அதான் மன்னிப்பு கேட்டேன் இல்ல... இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? வேணும்னா உன் கோபம் தீர என்னை அடிச்சிக்கோ" என்றவள் அவன் நெற்றி மீது வைத்திருந்த கையை எடுத்து தானாகவே தன் கன்னத்தில் அடித்துக் கொண்டாள்.

அவள் செய்கை உணர்ந்து வெடுக்கென்று அவள் பிடியில் இருந்த கையை உருவியவன் அவளை முறைத்தபடி எழுந்து அமர்ந்தான்.

அவனை ஒட்டி அமர்ந்தவள் அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியபடி "என் செல்ல மாமா இல்ல... நான் உன்னோட ஆசை அக்கா பொண்ணு தானே... நீயே சொன்ன மாதிரி சின்ன பொண்ணு... ஏதோ தெரியாம பேசிட்டேன்னு மன்னிச்சு விட்டுடேன்" என்று கொஞ்சலாக சொன்னாள்.

அவள் செய்கை சிறு வயது தாமரையை அவனுக்கு நினைவுபடுத்தியது. அவள் வயதுக்கு வரும் வரை ஏதாவது தவறு செய்துவிட்டு அவனிடம் திட்டு வாங்கும் போது இப்படித்தான் கொஞ்சி அவனை சமாதானப்படுத்துவாள்.

கோபத்தை மறந்து அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன் "இனி இப்படி பேசிப் பாரு" என்றான்.

"இல்ல... இனி பேசல"

ஒருகணம் அங்கே அமைதி நிலவியது.

சில நொடிகளுக்கு பிறகு அவனே அந்த அமைதியை கிழித்தெறிந்தான்.

"நான் உனக்கு துரோகம் பண்ணிடுவேனோன்னு உனக்கு தோணுதா தாமரை?"

அவனின் ஆழ்ந்த குரல் அவள் மனதை ஏதோ செய்தது.

கைகளால் முட்டியை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தவள் எதிரே இருந்த சுவற்றை வெறித்தபடி "இதுக்கு உனக்கு உண்மையான பதில் வேணுமா மாமா?" என்றாள்.

"ஆமா"

"உண்மையா சொல்லனும்னா எனக்கு பயமா தான் இருக்கு. ஒரு விஷயத்தை பழகறது ஈஸி. ஆனா அதை விடறது கஷ்டம். அது எனக்கும் தெரியும். எங்க நீ சென்னை போனா முன்ன மாதிரி அப்படியோ இருப்பியோன்னு எனக்கு பயமா இருக்கு. என் மாமாவா இருக்கும் போதே நீ அந்த மாதிரியெல்லாம் இருக்கறது எனக்கு பிடிக்காது. இப்போ நீ என்னோட புருஷன். அப்படியிருக்கப்போ என்னால நீ அப்படியிருக்கறதை சகிச்சிக்க முடியுமா சொல்லு?"

அவள் பதிலை கேட்டவனுக்கு வருத்தமாக இருந்தது.

"இனி நான் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்னு உன்கிட்ட சொன்னாலும் உன்னால அதை நம்ப முடியுமான்னு தெரியல. என்னோட வார்த்தையை விட என்னோட செயல் மூலமா நான் உனக்கு நம்பிக்கை கொடுக்கணும்னு நினைக்கிறேன். உனக்கு நம்பிக்கை வரணும்னா நான் என்ன பண்ணனும்னு சொல்லு"

"நீ எப்பவும் என்னோடவே இருக்கணும். சென்னைக்கெல்லாம் போக வேண்டாம்"

"சரி|" என்று உடனே ஒத்துக் கொண்டவன் "ஆனா எனக்கு இங்க சரியா வேலை கிடைக்காதே... அப்புறம் சம்பாத்தியத்துக்கு என்ன பண்ண?" என்றான்.

"நீ இனி இந்த கட்டடம் கட்ற வேலைக்கெல்லாம் போக வேண்டாம். அந்த வேலைக்கு போன பிறகுதானே தண்ணி, தம்மு, இன்னும் வேண்டாத சகவாசம் எல்லாம் உனக்கு வந்துச்சு. இனி நீ அந்த வேலைக்கே போகாத"

அவளை பார்த்து நக்கலாய் சிரித்தவன் "வேலைக்கு போகாம உன்னை வேலைக்கு அனுப்பிட்டு உனக்கு வீட்ல இருந்து சமைச்சு போடவா?" என்றான்.

"ஏன் அப்படி பண்ணா உன்னோட கவுரவம் குறைஞ்சிடுமோ?" என்று முறைத்தபடி கேட்டாள்.

"நான் எப்போ அப்படி சொன்னேன்? உனக்கு சமைச்சு போட நான் ரெடி தான். ஆனா அதையே வேலையா என்னால செய்ய முடியாது. ஆம்பிளைக்கு சம்பாத்தியம் தான் அழகு. அதுமட்டுமில்ல நீ வாங்கற பத்தாயிரம் ரூபாயில சோறு வேணும்னா திண்ணலாம். ஆனா பத்து பைசா சேர்த்து வைக்க முடியாது. நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட இல்ல. ரெண்டு பேரும் சேர்ந்து உழைச்சா தான் நம்ம பசங்களுக்காவது சொந்த வீட்ல இருக்கற கொடுப்பனை கிடைக்கும்"

"இப்போ என்ன சொல்ல வர? நீ சென்னைக்கு போயே தீருவேன்னு சொல்றியா?" என்று எரிச்சலுடன் கேட்டாள் அவள்.

"நான் சென்னைக்கு போவேன்னு சொல்லல. உன் விருப்பப்படி நான் இங்கேயே இருக்கேன். ஆனா கட்டடம் கட்ட போவேன்"

"அப்போதானே தண்ணி, தம்முனு ஜாலியா இருக்கலாம்"

"நான்தான் கொஞ்ச கொஞ்சமா குறைச்சிக்கிறேன்னு சொல்லிட்டேனேடி"

"இந்த வேலைக்கு போனா எங்க இருந்து விட போற? என் அம்மா மாதிரியே என் தலையெழுத்தும் இருக்கும் போல... அதை யாரால மாத்த முடியும்? நீ உன் விருப்பம் போல என்ன வேணுமோ பண்ணிக்கோ சாமி" என்றவள் கையை ஊன்றி எழ முயன்றாள்.

அவள் கையை பற்றி எழ விடாமல் தடுத்தவன் "பேசிக்கிட்டு இருக்கேன்ல... நீ பாட்டுக்கு எழுந்து போனா என்ன அர்த்தம்?" என்று கடிந்து கொண்டான்.

"இனி பேசி என்ன ஆகப் போகுது? அதான் நீ முடிவெடுத்திட்டியே" என்று முறைப்புடன் சொன்னாள்.

"இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..." என்றவன் "இங்க பாரு... இந்த காலத்துல ரெண்டு பேர் உழைச்சா தான் முன்னுக்கு வர முடியும். அதை கூட விடு... உன் பேச்சை கேட்டு நான் வேலைக்கே போகாம இருந்த எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க?" என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

"மத்தவங்க என்ன நினைச்சா எனக்கென்ன?" என்றவள் "இப்போ என்ன உன்னால வீட்டுல சும்மா இருக்க முடியாது அவ்ளோதானே... பேசாம நம்ம ஊர்ல இருந்து செய்யற மாதிரி ஏதாவது கடை போடு" என்றாள்.

"என்ன நீ? கடை போடுன்னு சாதாரணமா சொல்லிட்ட... அதுக்கெல்லாம் முன் அனுபவம், முதலீடு எல்லாம் வேணும் தெரியுமா?"

"வேலையை செய்ய ஆரம்பிச்சா அனுபவம் தானா வந்துட போகுது... நீ என்ன பொறக்கும் போதேவா கட்டிடம் கட்ட கத்துக்கிட்டு பொறந்த? கொஞ்சம் கொஞ்சமா தானே கத்துக்கிட்ட... அது மாதிரி என்ன தொழில் ஆரம்பிக்கிறியோ அதையும் கத்துப்ப. இந்த விஷயத்துல எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு"

அவளை பார்த்து கிண்டலாய் சிரித்தவன் "இந்த ஒரு விஷயத்துலயாவது உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கே. ரொம்ப சந்தோஷம்" என்றான்.

"உன் வேலையில நீ எவ்ளோ கெட்டிக்காரன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன். ஆனா மத்த விஷயத்துல நீ எனக்கு அந்த நம்பிக்கையை கொடுக்கலையே"

"சரி... திரும்ப ஆரம்பிக்காத. நாம பேசிக்கிட்டிருந்த விஷயத்துக்கு வா"

அவளிடம் வாய் கொடுத்தால் சேதாரம் தனக்குத் தான் என்று புரிந்தவன் லாவகமாக ஜகா வாங்கினான்.

"அதான் சொல்லிட்டேனே"

"அதுசரி... முதலீட்டுக்கு எங்க போக?"

"அதான் பேங்க்ல என் பேர்ல பதினைஞ்சு லட்சம் இருக்குல்ல. அதுல இருந்து வேண்டியதை எடுத்துப்போம்"

மறுப்பாக தலையசைத்தவன் "அந்த பணத்துக்கு நான் வேற ஒரு பிளான் வச்சிருக்கேன்" என்றான்.
 
Top